சமீபத்தில் சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஒன்றில் கணக்குப் பதிவியல் மற்றும் வணிகப் படிப்புகள் ஆசிரியரான ராஜகோபாலன், பாலியல் துன்புறுத்தல் அளிக்கும் நோக்கத்தோடு மாணவிகளை அணுகியிருப்பதாக வெளியான சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த பிரச்னை குறித்து முன்னாள் மாணவர்கள் சிலர் பல ஆதாரங்களை வெளியிட்டனர்.

 



 

ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளின் தோற்றம் குறித்து ஆபாசமாகப் பேசி கிண்டல் செய்வது, பாலியல் ஜோக்குகளை அடிப்பது, மாணவிகளைத் திரைப்படங்களுக்கு அழைப்பது, பின்னிரவில் மாணவிகளுக்கு ஃபோன் செய்வது, தேவையில்லாமல் தொடுவது, துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வெற்றுடம்புடன் ஆன்லைன் வகுப்புகளில் தோன்றுவது, மாணவர்களுக்கு தவறான வீடியோ லிங்க்குகள் அனுப்புவது என ராஜகோபாலன் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இந்த புகார்கள் முக்கிய வழக்காக எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணைக்காக சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலா ஆகியோர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

 


 

இப்படி தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கூட பாலியல் ரீதியான தாக்குதல் அதிகளவில் நடைபெறுவது பலரையும் அதிர்ச்சியடைய செய்கிறது. இந்நிலையில் பெண்களுக்கு நோக்கி தொடுக்கப்படும் பாலியல் பயங்கரங்களுக்கு எதிராக மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வரைந்த ஓவியம் பாரட்டைப் பெற்றுள்ளது. மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்தவர் பேஷன் டெக்னாலஜி மாணவி கீர்த்திகா. இவர் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்துவருகிறார்.  சிறுவயது முதலே சிறப்பாக ஓவியம் வரையக்கூடிய இவர் தற்போதைய விடுமுறையை தன்னுடைய ஓவிய மேம்பாட்டிற்காக பயன்படுத்திவருகிறார்.

 



 

காபி ஆர்ட் எனப்படும் காபி பொடியில் ஓவியம் வரைவதில்  பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் சென்னை தனியார் பள்ளியில் ஏற்பட்ட பாலியல் அத்துமீறலுக்கு எதிராக ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். அந்த ஓவியத்தில் அச்சம் தவிர் எனவும், ஆசிரியரின் கொடூர செயலை விளக்கும் வகையிலும் வரைந்த அந்த ஓவியம் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 


 

இது குறித்து கீர்த்திகா பேசுகையில்," எனக்கு ஓவியம் பரிச்சயமான ஒன்று என்றபோதும் கடந்தாண்டு லாக்டவுன் தான் என்னுடைய ஓவியத்தை மெருகூட்டியது. ஓவியம் என்பது அழகின் வெளிப்பாடு மட்டுமில்லை, அது ஒரு ஆயும் என்று புரிந்தது. பறையிசையைப்போல ஓவியமும் பல அரசியல்கள் பேசக்கூடிய ஒன்று என உணர ஆரம்பித்தேன். அதனால் ஓவியத்தின் மீது வெறும் அழகை மட்டும் செலுத்தாமல் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையும் செலுத்தினேன். கொரோனா முதல் அலையில் இருந்து தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரைந்துவிட்டேன் அதில் முக்கால்வாசி விழிப்புணர்வு ஓவியங்கள்தான்” என்கிறார்

 



 

கடந்த சிலவாரங்களுக்கு முன் பெண்ணின் மகத்துவத்தை வெளியே சொல்லும் வகையில் லைப் சைக்கிள் ஓவியம் ஒன்று வரைந்தேன். அந்த ஓவியம் என்னை எல்லாருக்கும் அறிமுகம் செய்துவிட்டது. பலரும் அதற்கு வாழ்த்து கூறினார்கள். இந்நிலையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட குற்றங்களுக்கு எதிராக ஓவியம் வரைந்துள்ளேன். இதன் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படும். பெரியளவு சமூக மாற்றம் ஏற்படவில்லை என்றாலும் சிறிய அசைவையாவது ஏற்படுத்தும் என நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய விழிப்புணர்வு ஓவியப்பணியை மேற்கொள்வேன்" என்றார்.