விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியிலிருந்து கூடை பந்தாட்ட அணியினர் கலந்துகொண்டனர். இந்த அணியின் கேப்டன், சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அபிநந்தனா என்ற பள்ளி மாணவியும் கலந்து கொண்டுள்ளார். மாணவி அபிநந்தனா போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டபோது திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்த பொழுதிலும் தான் போட்டியில் கலந்து கொள்வேன் எனக் கூறி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று போட்டி முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை விருதுநகரில் இருந்து புறப்பட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு மாணவி தனது சக நண்பர்கள் மற்றும்  பயிற்சியாளர்களுடன் சென்னை புறப்படுவதற்காக சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயில் நிலையம் முன்பாக மயக்கம் வருவதாக கூறியுள்ளார். 



 

இதனையடுத்து சிறிது நேரத்திலேயே மயங்கிய மாணவி அபிநந்தனா பயிற்சியாளரின் மடியில் விழுந்துள்ளார். இதை தொடர்ந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அபிநந்தனாவின் உடலை பரிசோதித்தபோது அபிநந்தனா உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அபிநந்தனாவுடன் வந்த மாணவிகள் சென்னைக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த மாணவி அபிநந்தாவின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து திலகர் திடல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வந்து விட்டு சொந்த ஊர் புறப்பட்ட மாணவி திடீரென ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் என்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


 












ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண