உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.






ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது.  மீனாட்சி அம்மன் கோயில் அருகே 1689 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 333 ஆண்டுகள் பழமையான அரண்மனை உள்ளது.



தற்போது பொதுப்பணித்துறை அலுவலகமாக செயல்பட்டு வரும் இந்த அரண்மனையை புனரமைக்க வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்த நிலையில், இந்த அரண்மனையை பழமை மாறாமல் 1.98 கோடி ரூபாய் மதிப்பில் தமிழக பொதுப்பணித்துறையின் பிரதான சின்னங்கள் பாரமரிப்பு பிரிவு சார்பாக புனரமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளது. மேலும் இந்த அரண்மனை வளாகத்திற்குள் பழமையான சிறைச்சாலை, உருளை வடிவ படிக்கட்டுகள் என பல்வேறு  பிரிவுகளை அதனை பழமை மாறாமல் கடுக்காய் கருப்பட்டி, சுண்ணாம்பு கலவை மூலம் 8447 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.




 

இன்னும் ஒரு வருடத்திற்குள்  பணி முடியும் எனவும் பணிநிறைவடைந்த உடன் அரண்மனை புதுப்பொலிவுடன் சுற்றுலா தளமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 50 கோடி மதிப்பிள் பிரதான சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டு புனரமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.