மெட்ரோ ரயில் மேலூரைத் தாண்டுமா.. மதுரை மக்களின் எதிர்பார்ப்பு இது தான் !

”குறைந்தபட்சம் மேலூர் வரையாவது இந்த திட்டதை செயல்படுத்த வேண்டும், அப்போது தான் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் என்றனர்.

Continues below advertisement
மெட்ரோ திட்டத்தை ஒத்தைக்கடை வரை மட்டும் சுருக்காமல் கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி வரை நீட்டிக்க வேண்டும்.

மதுரையில் மெட்ரோ ரயில்

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டமாக 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமங்கலம் முதல் - ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே வரும் நிலத்தடி மெட்ரோ ரயில்  நிலையம் இருப்பிடத்தை தேர்வு செய்வது இரு ரயில் நிலையங்களை ஒருங்கிணைப்பத்து குறித்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் IAS, மற்றும்  திட்டப்பணிகள் இயக்குநர் அர்ச்சுனன் உள்ளிட்ட அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்துள்ளனர்.
 

மெட்ரோ திட்ட இயக்குநருடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்

அப்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் IAS செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது...,”மதுரை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மதுரை ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், மெட்ரோ ரயில் நிலையமும் இங்கு வர இருக்கிறது. எனவே இரண்டு நிலையத்தை யும் ஒருங்கிணைத்து அமைக்க ரயில்வே நிர்வாக  முதன்மை துணை பொறியாளர் மற்றும் மெட்ரோ திட்ட இயக்குநருடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
 

நான்கு வருடங்களில் சேவை

இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே குறுகிய இடைவெளியில் பொதுமக்கள் ஒரு (மெட்ரோ to தென்னக ரயில்வே) நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு சுலபமாக சென்று வர ஏதுவாக அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.
 
மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க அறிக்கையை சமர்ப்பிக்கும் போது மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு குறித்த அறிக்கை முழுமையாக இல்லை, தற்போது இரண்டு திட்டங்களும் சிறு மாற்றங்கள் செய்து ஒருங்கிணைக்க ஏதுவான திட்டமிடப்பட உள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த சில மாதங்களில் கட்டுமான பணிகள் துவங்கப்படும். பணிகள் தொடங்கி  ரயில் சேவை நான்கு வருடங்களில் நிறைவடையும். மதுரை மற்றும் கோவையில் நிலம்  கையகப்படுத்தும் பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை மதுரை ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய ஒருங்கிணைக்கவே சிறிய  மாற்றங்கள் மட்டுமே செய்யப்படுகிறது.  மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவது குறித்தான ஆய்வு தற்போது நடத்தி வருகிறோம். மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வகையாக நடத்தப்பட இருக்கிறது.
 
உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்க 2 வருடங்களும், சுரங்கப்பாதை வழித்தடம் அமைக்க 3 வருடங்கள் ஆகலாம், மொத்தமாக மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 4 ஆண்டுகள் திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டம் மேலூர் வரை வந்தால் தான் இந்த திட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலூர் வரை மெட்ரோ

இது குறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் பா.ஸ்டாலின் நம்மிடம் தெரிவிக்கையில்..,” மேலூர் பகுதி வளங்கள் நிறைந்த பகுதி. கிராமங்கள் கொண்ட இந்த நகரத்தில் உழைக்கும் மக்கள் அதிகளவு வசிக்கின்றனர். இவர்கள் தங்களது தேவைக்காகவும், கல்வி, வேலை என பல்வேறு தேவைக்கு மதுரை மாநகர் நோக்கி தான் செல்கின்றனர். எனவே மெட்ரோ திட்டத்தை ஒத்தைக்கடை வரை மட்டும் சுருக்காமல் கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி வரை நீட்டிக்க வேண்டும். அப்போது தான் இப்பகுதி விவசாயம் மற்றும் தொழில்கள் மேம்படும். குறைந்தபட்சம் மேலூர் வரையாவது இந்த திட்டதை செயல்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola