மதுரையில் நடைபெற்ற கொலை

 

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்நிலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அமைச்சர் வீட்டு அருகே சாலையில நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த சாலையில் பாலசுப்ரமணியனை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் விரட்டியுள்ளனர்.

 

ஓட ஓட விரட்டிப் படுகொலை

 

அப்போது காப்பாற்றுங்கள் எனக்கூறி பாலசுப்பிரமணியன் கூச்சலிட்டபடி ஓடிய நிலையில் மர்ம கும்பலானது திடீரென அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயத்துடன் கிடந்த பாலசுப்பிரமணியரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து படுகாயங்களுடன் வந்த பாலசுப்ரமணியன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக எடுத்துச் சென்றனர். மதுரையில் அமைச்சரின் வீட்டு அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் 4 குற்றவாளிகளை காவல்துறையின் கைது செய்தனர். 

 

காவல்துறை அறிக்கை

 

இது குறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,” வழக்கின் முதற்கட்ட விசாரணையில், மகாலிங்கம் என்பவருக்கும் அவரது தம்பி மருமகன் பாண்டியராஜன் என்பவருக்கும் சொத்துப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜனுக்கு ஆதரவாக இறந்து போன அவரது சகோதரர் பாலசுப்பிரமணியன் என்ற பாலமுருகன் சொத்தினை சமமாக பிரித்து தருமாறு கேட்டு, மகாலிங்கத்திடம் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இப்பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணும் விதமாக பாண்டியராஜனின் மகள் பிரியா என்பவரை மகாலிங்கத்தின் மகன் அழகுவிஜய் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். திருமணமான பிரியா மற்றும் அழகுவிஜய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரியா, தனது தந்தை பாண்டியராஜன் வீட்டில் இருந்து கொண்டு அழகுவிஜய் மீது நீதிமன்றத்தில் பராமரிப்பு வழக்கும், விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 2024-ல் பாண்டியராஜன், மகாலிங்கத்திடம் தனது மகளுக்கு சேர வேண்டிய சொத்தினை பிரித்து தருமாறு கேட்ட போது, ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பாண்டியராஜனின் புகாரின்படி மகாலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

புலன் விசாரணை







 

இந்நிலையில், பாண்டியராஜனின் மகள் பிரியா, அவரது கணவர் அழகுவிஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மகாலிங்கம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பாண்டியராஜன் தனது சகோதரர் பாலமுருகனை வைத்து, ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். எனவே பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் தன்னை தாக்குவதற்கு முன்பாக அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்த மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அழகுவிஜய், அவர்களிடம் லோடு மேன்களாக வேலை செய்து வரும் (1) பரத் (2) நாக இருள்வேல் (3) கோகுலகண்ணன் மற்றும் (4) பென்னி ஆகியோருடன் சேர்ந்து சரித்திரப்பதிவேடு குற்றவாளியான பாலமுருகனை கொலை செய்துள்ளனர். பாலமுருகனை கொலை செய்த அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையானது இருதரப்பினருக்குமிடையே திருமண உறவினால் ஏற்பட்ட பிரச்சனையாலும், அவர்களுக்கிடையே சொத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையாலும் நடைபெற்றதாகும். வழக்கானது புலன் விசாரணையில் இருந்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.