உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தரமற்ற முறையில் அமைத்த சிமெண்ட் சாலை ஒரே வாரத்தில் விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த அவல நிலையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

சாலை வசதி திட்டம்

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு மீனம்மாள் 1வது தெரு பகுதியில் 100க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெரு பகுதியில் கடந்த வாரம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

 

சிதிலமடைந்த  சிமெண்ட் சாலையை

 

அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை முறையாக பராமரிக்கமலும், ஒப்பந்ததாரர்களின் கனரக வாகனங்கள் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை வழியாக சென்று வந்தால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், பல இடங்களில் பள்ளமும் ஏற்பட்டுள்ளது. சாலை அமைக்கப்பட்ட ஒரே வாரத்தில் ஜல்லிக் கற்கள் தெரியும் அளவு சிதிலமடைந்த நிலையில் காணப்படும் இந்த சாலையை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு முறையாக பராமரிப்பு செய்யாமல் சிதிலமடைந்த இந்த சிமெண்ட் சாலையை உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,

 

அடுத்த கட்ட நடவடிக்கை


 

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் கொண்டுவரும் திட்டங்கள் முறையாக இல்லை. பல வருடத்திற்கு போடப்படும் சாலை திட்டம் கடமைக்கு போடப்பட்டுள்ளது. ஒருவாரத்திற்கு கூட தாங்க முடியாத சாலை எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தை தான் ஏற்படுத்தும். எனவே உடனடியாக இந்த சாலையை சரி செய்ய வேண்டும். இது குறித்து அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளோம்” என தெரிவித்தனர்.