அஞ்சல் தேர்வில் தமிழ்நாடு தேர்வர்கள் தீர்வைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு வேண்டுகிறேன் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், “கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு ஜனவரி 27 முதல் ஆன் லைன் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்றாலும்  அதைச் செய்ய முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறைமையில் 10 ஆம் வகுப்பு தேறிய தேர்வர்கள் தவித்து வருகிறார்கள்.  இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் 3167. 

 





10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால் ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 வது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது "தெரிவு மொழி" என்பது. மற்ற மாநிலங்களில் இது இருக்கிறது. ஆகையால் பிற மாநில தேர்வர்களுக்கு பிரச்னை இல்லை. 6 வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாடு தேர்வர்கள் பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆன்லைன் முறைமை விடவில்லை. 



நான் அஞ்சல் துறை செயலாளர் திரு வினீத் பாண்டே, தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர் பி.செல்வக்குமார் ஆகியோருக்கு இது குறித்து கடிதங்களை எழுதி இருந்தேன்.  இன்று (நேற்று) என்னிடம் அலை பேசியில் தொடர்பு கொண்டு பேசிய அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குநர் ராசி சர்மா அவர்கள் இப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும், 6 வதாக உள்ள "தெரிவு மொழி" பகுதி தமிழ்நாடு தேர்வர்களுக்கு தடையாக இல்லாத வகையில் மாற்றப்படும் என்றும், விண்ணப்ப கடைசி தேதி மூன்று நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.  அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு தேர்வர்கள் தீர்வைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.