கோயில் நகரம் என்று சும்மா பெயர் வைக்கவில்லை என்பது போல் திரும்பிய திசையெல்லாம் மதுரையில் கோயில்கள் நிறைந்திருக்கும் மதுரை. மீனாட்சியம்மன் கோயில்தான் மதுரையையே நிர்மாணிக்கிறது. ஒவ்வொரு நாளும் திருவிழா போல் மக்கள் கூட்டம் இருக்கும். மீனாட்சியம்மன் கோயில் ஆன்மீகத்தை மட்டுமல்ல கலை, கலாச்சார பண்பாட்டு இயக்கத்தோடு தொடர்புடையது என உறுதிப்படுத்துகிறது.



இப்படி  பெருமை கொள்ளும் அளவிற்கு பேசப்படும் மீனாட்சியம்மன் கோயிலில் வீரவசந்த ராயர் மண்டபத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பயங்கர தீ விபத்தில் மண்டபம் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் மண்டபத்தை புனரமைக்க தமிழ்நாடு அரசு சார்பாக 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மூன்று ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கற்கள் தேர்வு செய்யப்பட்டு மதுரை செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டுள்ளது. 


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு விரைவில் பணி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புனரமைப்பு பணிக்கு  ஒப்பந்த புள்ளியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் திரும்ப செலுத்த (27.10.2021) தேதி மாலை 3 மணிக்குள் கோவில் வளாகத்தில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். 



மேலும் மீனாட்சியம்மன் கோயில் புனரமைப்பு பணிகளை 36 மாதத்தில் முடிக்க காலத்திற்குள் முடிக்கப்படவேண்டும், கோவில் நிர்வாகம் சார்பாக கற்கள் இலவசமாக வழங்கப்படும், தூண்கள், சிம்ம பீடம், சிம்மம், உத்திரம், கபோதகம், கொடிவாலை, நடகசட்டம் என பழமை மாறாமல் ஆகம விதிப்படி கலைநயமிக்க வகையில் புணரமைக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு யாரும் ஒப்பந்தப் புள்ளியை எடுக்க முன்வராத நிலையில் ரத்து செய்யப்பட்டது, மேலும் பழமை மாறாமல் புனரமைப்பிற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் வீர வசந்த ராயர் மண்டபத்தை புனரமைக்க 10 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு செய்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.



மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் வி. காளமேகம் நம்மிடம், " மதுரை மீனாட்சியம்மன் கோயில் பணிகள் 4 வருடமாக தாமதமாகிவிட்டது. டெண்டர்கள் தொடர்ந்து கை மாறுகிறது. எனவே இந்த முறையாவது பணிகள் விரைவாக முடிக்க வேண்டும். அதே சமயம் ஆகம விதிப்படி பணிகளை செய்து முடிக்க வேண்டும். கும்பாஷேகம் நடத்தவும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றார்.