நாளை வாக்குப்பதிவு எண்ணிக்கை மதுரை அரசு மருத்துவகல்லூரியில் உள்ள மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு.

 

தேர்தல் திருவிழா 2024

 

Election Results 2024: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர், மதுரை மத்திய தொகுதி, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என 6 சட்டமன்றத் தொகுதிகளை உட்பட்ட மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 542 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 1573 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான 9 லட்சத்தி 80ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை முழுவதிலும் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தூரங்களுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வருவதற்கான கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

கொண்டாட்டங்களுக்கு தடை

 

மேலும் ஒவ்வொரு சுற்றுக்களிலும் வாக்கு எண்ணிக்கை விபரங்களை அறிவிப்பதற்காக ஆங்காங்கே ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எண்ணிக்கை முழுவதிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. வாக்கு எண்ணிக்கை பணிக்கான அதிகாரிகள், அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் செய்தியாளர்கள் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடவுள்ள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கைக்கான முகவர்கள் உரிய சோதனைக்கு பின்னர் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேனா, பேப்பர் தவிர செல்போன் உள்ளிட்ட எந்தவித எலெக்ட்ரானிக் பொருட்களும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்பவர்களை அனுமதிக்க தனிதனியே வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி., கேமிராக்கள் அமைக்கப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள சாலை பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பட்டாசு வெடிப்பது  முழக்கங்களை எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கையான காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

காவல் துறையின் கட்டுப்பாட்டில் 

 

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் வாக்குப்பதிவு எண்ணிக்கை குறித்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து அதிகாரிகளும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து இறுதிகட்டமாக வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தற்போதிலிருந்தே காவல் துறையின் கட்டுப்பாட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை கொண்டுவரப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்ட கேமராக்கள் திடீரென பழுதான நிலையில் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கவுள்ள மிகுந்த எதிர்பார்ப்போடு அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர்.