கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றும், இது தொடர்பான வழக்குகளுடன் சேர்த்துப் பட்டியலிடவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

கோகுல்ராஜ் தாயார் சித்ரா மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகன்  கோகுல்ராஜ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 நபர்களை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை வழங்கியது. அதேசமயம் சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய ஐவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. 

 

இந்த வழக்கு விசாரணையின் போது விடுதலை செய்த ஐந்து நபருக்கும், குற்ற சம்பவத்தில் தொடர்பு இருப்பதை கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ஆகவே இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

 

இதே போல கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஐந்து பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்,  ஹேமலதா அமர்வு, இரு வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்று, அவை தொடர்பான பிற வழக்குகளுடன் பட்டியலிட உத்தரவிட்டனர்.

 



மற்றொரு வழக்கு

 

உரிய அனுமதியின்றி அரசு இடத்திலுள்ள மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது. அவ்வாறு யாரேனும் மரங்களை வெட்டினால் அதனை சட்ட விரோதமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


புதுக்கோட்டையைச் சேர்ந்த கௌதீன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் முறையான அனுமதி இன்றி மரங்களை வெட்டியதாகவும் சட்டவிரோதமாக அவற்றை விற்பனை செய்த முருகேசன் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனிஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி சந்திரசேகரன் அமர்வில், அரசு தரப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இடத்தில் புயலின் போது வேரோடு சாய்ந்த மரங்களையும் மின் வயர்களின் மீது சாய்ந்த மரங்களையும் கிராமத்தினர் அகற்றியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி யாரும் மரம் வெட்டவில்லை என தெரிவிக்கப்பட்டது.


இதனை அடுத்து நீதிபதிகள், சட்டவிரோதமாக அரசு இடத்திலுள்ள மரத்தை வெட்டியவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது.


இருந்தும் வரும் காலங்களிலும் உரிய அனுமதியின்றி அரசு இடத்திலுள்ள மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது. அவ்வாறு யாரேனும் மரங்களை வெட்டினால் அதனை சட்ட விரோதமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.