அறநிலையத்துறை அலுவலர்களுக்கான விதிகள் குறித்த அரசாணை மற்றும்  அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை 


மதுரையை சேர்ந்த சுதர்சனம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, சட்டம் 1959 - இன் படி செயல்பட்டு வருகிறது. சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்த துறை சார்பாக இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, அதற்கான அறிவிப்பாணை 2022ஆம் ஆண்டில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை ஆணையரால் வெளியிட்டப்பட்டது. இந்த புதிய விதியில், "3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வெளித்துறை பணியாளர்கள்,  செயல் அலுவலர் நிலையில் உள்ள மற்றொரு அறநிலையத்திற்கு மாறுதல் செய்யப்படுவார்.


ஒவ்வொரு ஆண்டும் ஒரே அறநிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களின் பட்டியல் ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை சுழற்சி முறையில், ஒவ்வொரு ஆண்டும்  மற்ற அறநிலையத்திற்கு பணிமாறுதல் செய்ய வேண்டும்.




பழைய விதிகளே போதுமானதாக உள்ள நிலையில், புதிய விதிகள் சட்டத்திற்கு புறம்பானது. ஆகவே, "இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் தொடர்பான அரசாணை மற்றும்  அறிவிப்பாணைக்கு   இடைக்கால தடை விதிப்பதோடு, அவற்றை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் குறித்த அரசாணை மற்றும்  அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கு குறித்து சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறையின் செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.





 

குரங்கனி மலைக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற பெல்ஜியம் நாட்டின் பீட்டர் வான் கெய்ட் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு  பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

 

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் கெய்ட் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.அதில், " சென்னையில் உள்ள சில தன்னார்வலர்கள் உதவியுடன் சென்னை டிரெக்கிங் கிளப் (சிடிசி) எனும் அமைப்பை 2013 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம்.  மகளிர் தினத்தை முன்னிட்டு கொழுக்கு மலை மற்றும் குரங்கனி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டனர். முறையான அனுமதி பெற்றே 27 பேருடன் மலைக்கு சென்றுள்ளார். ஆனால், குரங்கனியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்த நால்வர் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.  அவர்கள் இறந்த காரணத்தால், 27 பேரும் சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் காட்டுக்குள் நுழைந்ததாக வனத்துறையினர் கூறி வருகின்றனர்.

 

இதில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே, என் மீதான வழக்கை  ரத்து செய்து உத்தரவிட வேண்டும் " என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.