தமிழகத்திலுள்ள  மாநகராட்சிகள், நகராட்சிகளிலும்  பயண்பாட்டிலுள்ள தெரு விளக்குகளை மாற்றி விட்டு LED  விளக்குகளை பொருத்த ரூ.342 கோடி  நகர்ப்புற வளர்ச்சி நிதியிலிருந்து கடன் பெறுவதற்காக அரசாணையில் மாற்றம் செய்ய கோரிய வழக்கில், புதிய மனுவை மனுதாரர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடம் வழங்கவும் அவர் மனுதாரரின் மனுவை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்யலாம் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

ராமநாதபுரம்  முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த சங்கர பாண்டியன்  உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில்  தாக்கல் செய்த பொது நல மனு. அதில், "தமிழகத்திலுள்ள 11 மாநகராட்சிகள், 87 நகராட்சிகளிலும்  தற்போது  பயண்பாட்டிலுள்ள தெரு விளக்குகளை மாற்றி விட்டு LED விளக்குகளை பொருத்த உள்ளனர். இந்த பணிக்காக ரூ.342 கோடி நகர்ப்புற வளர்ச்சி நிதியிலிருந்து கடன் பெறுவதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த அரசாணை மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

 

அரசின் தற்போது செயல்படுத்தி வரும்,   நமக்கு நாமே திட்டம் விதிமுறையின் படி தெரு விளக்குகளை,  LED விளக்குகளாக மாற்றுவதற்கு நன்கொடையாளர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள், மக்கள் பங்களிப்போடு 50% திட்ட மதிப்பீட்டில் கொடையாக வழங்குவதற்கு தயாராக உள்ளனர். முதற்கட்டமாக இந்த திட்டத்தின் மூலம் பணிகளை மேற்கொண்ட பிறகு,  தேவைபட்டால் பிறகு கடன் பெறலாம். இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடன் சுமை ஏற்படாமல் இருக்கும்.

 

எனவே, தமிழகத்திலுள்ள  மாநகராட்சிகள், நகராட்சிகளிலும்  பயண்பாட்டிலுள்ள தெரு விளக்குகளை மாற்றி விட்டு LED  விளக்குகளை பொருத்த ரூ.342 கோடி  நகர்ப்புற வளர்ச்சி நிதியிலிருந்து கடன் பெறுவதற்காக அரசாணையில் மாற்றம் செய்ய உத்தரவிடவும், தெரு விளக்குகள் மாற்றும் திட்டத்தினை மக்கள் பங்களிப்போடு செயல்படுத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார்,  விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. அரசின் நிர்வாக நடைமுறையில் தலையிட விரும்பவில்லை உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரத்தை குறைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என தெரிவித்து, எனவே, மனுதாரர்  தனது கோரிக்கை குறித்து புதிய மனுவை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடம் வழங்க வேண்டும்.  மனுதாரரின் மனுவை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்யலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.



மற்றொரு வழக்கு



திருச்சி, திண்டுக்கல் பொன்னம்பலம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.







திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சை உயிரிழந்த தனது மனைவிக்கு இழப்பீடு வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 2018 ஆம் ஆண்டு மனுதாரரின் மனைவி திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பொன்னம்பலம்பட்டி பகுதில் சுங்கச்சாவடிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது சுங்கச்சாவடியின் அறிவிப்பு பலகை மனுதாரரின் மனைவியின் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே தனது மனைவி உயிரிழந்ததாகவும் அதற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

 

தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில், பயங்கர காற்று வீசியதன் காரணமாகவே அறிவிப்பு பலகை விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது .இது இயற்கையின் சீற்றம், மேலும் கடவுளின் செயலாகவே இருக்க வேண்டும் இதற்கு நெடுஞ்சாலைத்துறை பொறுப்பாகாது என தெரிவித்தனர்.

 

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,நெடுஞ்சாலைத் துறையில் சுங்கச்சாவடியின் அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழந்ததற்கு கடவுளின் செயல் தான் காரணம் என கூறுவதை இந்த நீதிமன்றம் ஏற்க முடியாது. 

மனுதாரரின் மனைவி கூலி தொழில் செய்யக்கூடியவர் அவருக்கு ரூ 5 லட்ச இழப்பீட்டை உயிரிழந்த நாளிலிருந்து தற்போது வரை 6% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.