காணாமல் போன கணவரை மீட்டு ஆஜர் படுத்தக் கோரிய ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில், மனுவை திரும்ப பெறாத மனுதாரருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை வெள்ளியம் குன்றத்தைச் சேர்ந்த உஷா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தக்கல் செய்திருந்தார்.அதில், "நானும் எனது கணவர் ஜவுடியும் புதூர் ஐயப்பன் கோவில் அருகே தீபக் என்னும் ஹோட்டலை நடத்தி வருகிறோம். கடந்த 2017 ஆம் ஆண்டு ஹோட்டலுக்கான கட்டிடத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பாக விவேக் என்னும் நபரிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 10 லட்ச ரூபாய் முன் தொகையாகவும் 56 ஆயிரம் ரூபாய் மாத வாடகையாகவும் முடிவு செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு கூடுதல் வாடகை ஒப்பந்தமும் பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் கடந்த 2021 ஜனவரி மாதம் விவேக் அவரது அடியாட்களுடன் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு மிரட்டினார். இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை திரும்பப் பெறுமாறு தொடர்ச்சியாக மிரட்டி வந்தார்.

 

கடந்த நவம்பர் 18ஆம் தேதியும் இதே போல மிரட்டல் வந்தது இது தொடர்பாக நவம்பர் 24 ம் தேதி காவல்துறையினரிடம் எனது கணவர் புகார் அளித்தார். 28ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்த நிலையில் விசாரணைக்காக சென்ற எனது கணவர் வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது கணவரை மீட்டு ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரமோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அரசு தரப்பில், காணவில்லை என கூறப்பட்ட மனுதாரரின் கணவர் மருத்துவமனை ஒன்றில் இருந்ததாக அறிந்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கணவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்ட நிலையில் ஏன் மனுவை திரும்ப பெறவில்லை என கேள்வி எழுப்பி மனுதாரருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

 





மற்றொரு வழக்கு



 











தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் கோரி மதுரை விஜயகுமார் தொடர்ந்த வழக்கில், 2 லட்ச ரூபாயை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செலுத்த மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரையைச் சேர்ந்த விஜயகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, "மனுதாரர் சுமார் 4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக  கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் மனுதாரர் தவறுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அரசு தரப்பில் மனுதாரர் ஏற்கனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.  ஆகவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

இந்த வழக்கில் மனுதாரர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 2 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும். மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.