1986ல் மண்டபம் அகதிகள் முகாமில் பிறந்த நளினி என்பவருக்கு பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 


திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த நளினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த போரின் போது தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். மண்டபம் அகதிகள் முகாமில் 1986 ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்த நிலையில், தற்போது திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் எனக்கு வேலை கிடைத்து மிகப் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் வழங்கக்கோரி விண்ணப்பித்த போது எந்த நாட்டைச் சேர்ந்தவர்.. என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்ததால், நேரில் ஆஜராகி எனது விளக்கத்தை சமர்ப்பித்தேன். எனது பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நான் இந்திய மண்ணிலேயே பிறந்தேன். அதற்கான சான்றுகளும் உள்ளன. இந்திய குடியுரிமை சட்டம் 1955ந் படி 1950 ஜனவரி 26ஆம் தேதி முதல் 1987 ஜூலை 1-ஆம் தேதி வரை இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்களாகவே கருதப்படுவர். ஆகவே 1986இல் தமிழகத்தில் பிறந்த என்னை இந்திய குடிமகளாக கருதி பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 



 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், " 1955 குடியுரிமைச் சட்டம் பிரிவு 3ந் படி 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை 1ஆம் தேதி வரை பிறந்தவர்கள் இந்திய குடிமக்கள். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் 1986ஆம் ஆண்டு பிறந்துள்ளார். தற்போது திருச்சி அகதிகள் முகாமில் உள்ளார். விதிப்படி அவர் இந்திய குடிமகள். ஆகவே அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

 



மற்றொரு வழக்கு

 

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்த லோக் அதாலத்தில் 2 கோடி 47 லட்சத்து 56 ஆயிரத்து 424 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது !







 

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி கிருஷ்ணவள்ளி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் இரண்டு பிரிவுகளில் விசாரணை நடந்தது. இதில் போக்குவரத்து, நிதி நிறுவனம் மற்றும் இன்சூரன்ஸ் தொடர்பான மனுக்கள் மற்றும்  சீராய்வு மனுக்கள் உள்ளிட்ட 210 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதில் 17 வழக்குகளில் 2 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரத்து 424 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.