சிவகங்கையை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியிலுள்ள விவசாயிகள் ஜோதி ரக நெல் சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யப்பட்ட பின் ஜோதி ரக நெல்லை குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். அறுவடைக்கு முன் 66 கிலோ நெல் மூட்டை 1300 ரூபாய்க்கு  வாங்கினர். தற்போது, அந்த 66 கிலோ கொண்ட ஒரு மூட்டை 900 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்கின்றனர். இதனால், விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே, அரசின் நேரடிக் நெல்  கொள்முதல் நிலையங்களில் ஜோதி ரக நெல்  வாங்குவதற்கு மறுக்கின்றனர். அவர்கள் பொன்னி ரக நெல்லை தான் வாங்குவோம் என்று கூறுகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி ஜோதி ரக நெல் வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, விவசாயிகளின் நலன் கருதிஅரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஜோதி ரக நெல்  வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு  நீதிபதிகள் பரேஷ் உபத்யாய், கிருஷ்ணன் ராமசாமி   அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏழை  விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கருத்து தெரிவித்து வழக்கு குறித்து  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

 



 










மருத்துவமனைகளின் அலட்சியத்தால் எய்ட்ஸ் பரவல் - குடும்ப நலத்துறை செயலர் பதில் தர உத்தரவு 


மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்ட இளம்பெண் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் கர்ப்பம் ஆனது முதல் அனைத்து பரிசோதனைகளும் பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொண்டு வந்தேன். ஸ்கேன் பரிசோதனைகள் மட்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வழிகாட்டுதலின் பேரில் அலங்காநல்லுாரிலுள்ள தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. பரிசோதனையில் ரத்தம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து பாலமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பரிந்துரையின் பேரில் ரிசர்வ்லையன் கண்ணா மருத்துவமனைக்கு (21.12.2020) அன்று இரத்தம் ஏற்றும் போது சிறிது நேரத்திலேயே எனக்கு உடல் நடுக்கம் ஏற்படவும் இரத்தம் ஏற்றுதல் நிறுத்தப்பட்டது.பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் இரத்தம் ஏற்றப்பட்டது. 


23.12.2020 அன்று சுகப்பிரசவம் மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. முழு உடல்நலத்துடன் 30.12.2020 அன்று மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து நானும் என் குழந்தையும் வீட்டிற்கு சென்றோம்.மேட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. பிறகு எனக்கு எடை குறைய ஆரம்பித்தது. தொடர் காய்ச்சல் இருந்தது பின் மருத்துவமனையில் பரிசோதித்தபோது HIV தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை செல்லுமாறு மருத்துவர் பரிந்துரைத்தார்.


மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் எனக்கும், என் குழந்தை மற்றும் எனது கணவர் அனைவருக்கும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது அதில் எனக்கும், என் குழந்தைக்கும் HIV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனது கணவருக்கு HIV இல்லை என கூறினார்கள்.இதனால் பெரிதும் மனம் உளைச்சல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர், அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.எச்ஐவி தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது இதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.


எனவே, மருத்துவமனைகளின் அலட்சியத்தால் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கும், என் குழந்தைக்கும் உரிய மருத்துவ உதவி செய்யவும் நிவாரணம் வழங்கவும் மேலும் எய்ட்ஸ் தொற்று உள்ள ரத்தத்தை ஏற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.