IAS அதிகாரி தலைமையில் பட்டாசு ஆலைகளை கண்காணிக்க கோரிய வழக்கு - தொழிலகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு 


விருதுநகர் மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "விருதுநகர் மாவட்டத்தில் 1500 பட்டாசு ஆலைகளுக்கும் அதிகமான அளவில் உள்ளன. பெருமளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் இந்த பட்டாசு ஆலைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.


பட்டாசு ஆலையில் பல்வேறு விதமான வேதி பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை.  2012 முதல் கடந்த டிசம்பர் வரை 9 பெரும் விபத்துக்கள் நடைபெற்றதில், 43 பேர் உயிரிழந்துள்ளனர். விதிகள் முறையாக பின்பற்றப்படாததால், அப்பாவி தொழிலாளர்களே தங்கள் உயிரை இழக்கின்றனர். ஆகவே IAS அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்கவும்,  முறைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வழக்கு குறித்து தொழிலகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை செயலர், ஆணையர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




 

அனைத்து சடக்கல்லூரி மாணவர்களுக் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் - மதுரை உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம்

 

மதுரையைச் சேர்ந்த பிரபாகர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் பிஏ, எல்எல்பி 4 ஆம் ஆண்டு படிக்கிறேன். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கட்டுப்பாடுகளுடன் நேரடி வகுப்புகள் துவக்கப்பட்டன.

 

எங்கள் கல்லூரியில் போதிய இடவசதி இல்லை என்பதால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்தன. நேரடி வகுப்பிற்கு கட்டாய வருகை தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் வருகைப் பதிவேடு முறையாக பின்பற்றப்படவில்லை. போதிய அளவுக்கு வருகைப் பதிவேடு இல்லை என்பதால் 4 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுக்கான பட்டியலில் என் பெயர் இல்லை. வருகைப் பதிவேடு முறையாக பின்பற்றாத நிலையில், போதியளவு வருகைப் பதிவேடு இல்லை என்பது சட்டவிரோதம். எனவே, தேர்வு கட்டணம் செலுத்திய அனைவரையும் செமஸ்டர் தேர்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை நீதிபதி அப்துல்குத்தூஸ்  விசாரித்தார். பல்கலைக் கழகம் தரப்பில், தேர்வுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இதற்கான உத்தரவு நகலை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி மனு மீதான விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தார்.