விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர் நலச்சங்கத்தின் செயலர் நாராயண பெருமாள் சாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், "குவாரிகளை லீசுக்கு எடுக்கும்போது சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்திற்கும் வரி மாவட்ட கனிம வள கட்டணமாகவும் வரி என அரசுக்கும் கட்டணமாக செலுத்தப்படுகிறது. லீசுக்கு எடுக்கப்படும் குவாரிகளிடமிருந்து வசூலிக்கப்படும் வரியே ஒரு கிராமத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள போதுமானதாக உள்ளது. ஆனால் இது பெயரளவிலேயே உள்ளது. வரித்தொகை முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இந்நிலையில் தற்போது கூடுதலாக பசுமை நிதி எனும் பெயரில் வரி வசூலிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

எனவே, பசுமை நிதி எனும் பெயரில் குவாரி உரிமையாளர்களிடம்  வரியை வசூலிக்க வழிவகை செய்யும் அரசாணையை ரத்து  செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, வழக்கு குறித்து தமிழக தொழில்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.