தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளும், வழக்கறிஞர்களும் தரவுகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


VPN செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒன்றில் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்தது தெரியவந்தது. 2020ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணமாக,. நமது நாடு இளம் தலைமுறையினரின் கைகளிலேயே உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு இளம் தலைமுறையினரின் உளவியல், உடல், பொருளாதாரம், சமூக  அளவில் திறன் படைத்தவர்களாக இருப்பது அவசியம். ஆனால் அவற்றில் வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக, இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவது, சமூக வலைதளங்களில் நேரங்களை செலவிடுவது போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர்.  ஆகவே இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடுப்பதும் அவற்றிலிருந்து இளைஞர்களை மீட்பதும் அவசியமான ஒன்று.  இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டே, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இதனை பொதுநல வழக்காக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. VPN செயலிகளை  முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள், செயலிகளை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனல்களை முறைப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை விளையாடக் கூடாது என்பது தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, பப்ஜி, free fire போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினர் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை மட்டுப்படுத்த இயலாது ஆனால் இளையோர் அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவது உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர் அரசு தரப்பில், "பப்ஜி, free fire போன்ற விளையாட்டுக்களை இளைஞர்கள் விளையாடக் கூடாது என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது. தற்போது கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து நீதிபதிகள், " வழக்கறிஞர் சமுதாயம் உலகையே மாற்றும் ஆற்றல் பெற்றது. ஆகவே இந்த வழக்கு  தொடர்பாக வழக்கறிஞர்கள் விபரங்களைத் தாக்கல் செய்யலாம் என குறிப்பிட்டனர். தொடர்ந்து, "தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளும், வழக்கறிஞர்களும் தரவுகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, google, YouTube நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




 







பிரெய்லி முறையில் திருக்குறள் புத்தகங்களை வெளியிடக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர், ராம்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழ் மொழியின் ஒப்பற்ற சிறப்புகளில் ஒன்றான திருக்குறள் உலகப்பொதுமறையாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க திருக்குறள்  பிரெய்லி முறையில் வெளியிடப்படவில்லை. இதனால் பார்வை மாற்றுத்திறனாளிகள் அதன் சிறப்புகளை  அறிந்து இன்பம் கொள்ள இயலவில்லை. கடந்த 2017 மார்ச் 21ல் தமிழக பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 12ஆம் வகுப்பிற்குள் சுமார் 1050 குறள்களை அனைத்து மாணவர்களும் பயில வேண்டும் என அரசாணை வெளியிட்டது. ஆனால், பார்வையற்றவர்கள் பயில்வதற்கான வாய்ப்புகள் இல்லை.  ஆகவே பார்வையற்றவர்கள்  தாங்களே படித்து, பயன்பெறும் வகையில் தமிழ், ஆங்கில மொழிகளில் பிரெய்லி முறையில் திருக்குறள் புத்தகங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது. 

 

இந்த மனு  நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், திருக்குறள், சங்க தமிழ் இலக்கிய நூல்களும்   பிரெய்லி முறையில்  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக பார்வையற்றோர் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

 

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். தொடர்ந்து திருக்குறள், சங்க தமிழ் இலக்கிய நூல்களைப்பிரெய்லி முறையில்  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக பார்வையற்றோர் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்த தமிழ் வளர்ச்சி துறைக்கு நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டனர்.