சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது புரசை உடைப்பு. இங்குள்ள திறந்தவெளி சிறையில் கைதிகள் மூலம் இயற்கை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திறந்த வெளி சிறைச்சாலையை பார்த்து வியப்படைந்த மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் மகிழ்ச்சியடைந்தனர். புரசை உடைப்பு பகுதியில் கடந்த 2013 முதல் திறந்தவெளி சிறைச்சாலை செயல்படுகிறது. 2015 முதல் முழுவீச்சில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. வானம் பார்த்த பூமியாக பார்க்கப்படும் சிவகங்கை மாவட்டத்தில் சவாலாக விவசாயம் செய்யப்படுகிறது. சுமார் 85 ஏக்கர் சிறையில் 35 ஏக்கரில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இயற்கையாகவே வளர்ந்து நிற்கும் புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளது. வாழை, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சோளம், நிலக்கடலை உள்ளிட்ட ஏகப்பட்ட விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. 350 தென்னை மரங்கள், 300 கொய்யா மரங்கள், 50 நெல்லி மரம், 40 முந்திரி மரம், 20 பலா மரம், எலுமிச்சை கன்று என ஏகப்பட்ட பலன் தரும் மரங்கள் உள்ளது.



அதே போல் தேக்கு, சந்தனம், மகாகனி, தேக்கு, ரோஸ் உட் என்று டிம்பர் மரங்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு மரங்களும் உள்ளது. குறைந்த கால பயிர்களான கத்தரி, வெண்டை, அவரை, கொத்தவரங்காய், பருத்தி, உளுத்தும் பயிர் செய்யப்படுகிறது. பயிர்களுக்கு தேவையான இயற்கை உரங்கள் இங்குள்ள ஆடு, நாட்டு மாடுகளிடம் இருந்து கிடைக்கும் கழிவுகளை இயற்கை உரங்களாக பயன்படுத்துகின்றனர்.  தொடர்ந்து புரசை உடைப்பு சிறையில் விவசாயத்தை அதிகப்படுத்த  கிணறு அமைக்க சிறைத்துறை டி.ஜி.பி., அம்ரேஷ் பூஜாரி முயற்சி எடுத்துள்ளார்.

 


 

அதன் மூலம் இங்கு சிறப்பாக விவசாயம் செய்யமுடியும். திறந்தவெளி சிறை முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவதால் சிறைவாசிகளுக்கு மன அழுத்தம் குறைகிறது. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து மனமாற்றம் அடைகின்றனர். அதே போல் சிறைவாசிகளுக்கு தண்டனை காலம் குறைவாக மாறுவதும் இந்த சிறையில் கூடுதல் சிறப்பு. இதனால் டி.ஜி.பி., அவர்கள் திறந்த வெளி சிறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி திட்டங்களை செயல்படுத்துகிறார். இங்கு விளைவிக்கப்படும் காய்கள் மற்றும் பழங்கள் மதுரை மத்திய சிறையில் உள்ள அங்காடிகளில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடதக்கது. இயற்கை விவசாயம் செய்து வரும் திறந்த வெளி சிறைச்சாலையை பார்த்து வியப்படைந்த மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் பார்வையிட்டனர்.




உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதி அரசர்கள்  எம்.சுந்தர் மற்றும் நீதி அரசர் ஆர்.சக்திவேல் மற்றும்
கூடுதல் அரசு வழக்கறிஞர்  திருவடிக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முழு விவசாய பணிகளையும் பார்வையிட்டனர். மேலும் 500 மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு முதற்கட்டமாக தென்னை மரக்கன்றுகள் நட்டு பணியை துவக்கி வைத்தனர். இச்சிறையில் நீர்ப்பாசன வசதிக்காக அமைக்கப்பட்ட 70 அடி  கிணற்றினையும் அதன் மூலம் விவசாய பணிக்காக அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சொட்டுநீர் விவசாயப் பணிகளையும் பாராட்டி சென்றனர். இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.,  பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர்  சதீஷ்குமார் ஆகியோர் நீதி அரசர்களை வரவேற்று திறந்தவெளி சிறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயப் பணிகள் குறித்து தெரிவித்தனர்.



இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பனை விதையில் அழகான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, அசத்தல் விழிப்புணர்வில் மதுரையின் பசுமை ஆர்வலர்


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Southern Railway: இனி கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு வாராந்திர ரயில்! ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!