தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். 


அதில், "தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதியையும் பெற்று தொடங்கப்பட்டது. மக்களின் போராட்டத்தை தொடர்ந்து 2018 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. மேலும் தமிழக அரசு ஆணை 72ன் படி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது. வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதன் விளைவாக அவசரகால நிலையைகூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நிறுவனத்தின் உள்ளே ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப் பொருள்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக் கோரி மனு அளித்த நிலையில் அவையும் நிராகரிக்கப்பட்டது.


இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் போது மருத்துவ ஆக்ஸிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்ட குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலை பார்த்தனர்.தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணையை வெளியேற்றவும் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை சரி செய்ய உள்ளூர உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது.


எனவே, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை  வெளியேற்ற அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அதேபோல் தொழிற்சாலையில் முன்பு இருந்த மூலப்பொருட்கள் மற்றும் பொருட்கள் கழிவுகள் ஆகியவை வெளியேற்ற அனுமதி அளிக்க வேண்டும். என கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் S.S. சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கை ஜூலை 19ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.





மற்றொரு வழக்கு

 

ஒரு மாதத்தில் ஒரு சுங்கச்சாவடி வழியே பேருந்து எத்தனை முறை பயணிக்கும் என்பதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்து ஒரு மாத காலத்திற்கு பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் நல சங்கச் செயலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், "சாலைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும், சுங்கசாவடி மையங்கள் அவற்றை உறுதிப்படுத்த வேண்டும், மாத கட்டணச் சலுகை பாஸை முறைப்படுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், "வழக்கு தாக்கல் செய்த சங்க உறுப்பினர்களின் பேருந்துகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் நாளொன்றுக்கு 4லிருந்து 6 முறை பயணிக்கிறது. அப்போது பலமுறை சுங்கச்சாவடி மையங்களை கடக்கும் நிலை உள்ளது. அதற்காக மாதந்தோறும் பெறப்படும் கட்டணச் சலுகை பாஸ் ஒரு மாதத்தில், 50 முறை மட்டுமே செல்லுபடியாகும். 10 நாட்களுக்குள்ளாக இந்த பாஸ் முடிவடையும் நிலையில் புதிதாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. ஆகவே ஒரு மாதத்தில் 1 சுங்கச்சாவடியை கடந்து பேருந்து எத்தனை முறை பயணிக்கும் என்பதன் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயம் செய்து ஒரு மாத காலத்திற்கான பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.