விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா தூங்கா ரெட்டியபட்டியைச் சேர்ந்த சிவக்குமார், என்பவரின் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக் கோரிய வழக்கில், மனுதாரர் மனைவியை ஒரு வாரத்தில் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா தூங்கா ரெட்டியபட்டியைச் சேர்ந்த சிவக்குமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "எனக்கும், சங்கீதா என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பாளையத்தில் தனி குடித்தனம் இருந்தோம். என் மனைவி டெய்லராக இருந்தார். இந்த நிலையில் கடந்த 6.3.2021 அன்று எனது மனைவி அருகில் உள்ள கடை துணிக் கடைக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து தனது தாயாரை பார்த்துவிட்டு வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் ஒரு சிலர், என் மனைவி ஒருவருடன் காரில் சென்றதைப் பார்த்ததாக சென்றதாக தெரிவித்தனர். இது தொடர்பாக புதியம்பட்டி காவல்துறையினரிடம் புகார் செய்தேன். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை என் மனைவியை கண்டுபிடித்து ஒப்படைக்க எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. எனவே என் மனைவியை கண்டுபிடித்து தர உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மனுதாரர் தரப்பில், மனுதாரர் மனைவியை கண்டுபிடிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 19 மாதங்களாக அவரை கண்டுபிடிக்கவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

 

அப்போது நீதிபதிகள், 19 மாதங்களுக்கு முன்பு மாயமான மனுதாரரின் மனைவியை கண்டுபிடிக்காதது ஏன்?  ஏன் இவ்வளவு தாமதம்? என கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில், மனுதாரர் மனைவியை ஒரு வாரத்தில் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

 



மற்றொரு வழக்கு














ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய வழக்கில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த பெரியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "எங்களது மாவட்டத்தைச் சுற்றிலும் 5000க்கும் மேற்பட்ட பனை மரங்கள் காணப்படுகிறது இதன் மூலம் எங்கள் ஊர் மக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பனைவெல்லம், பதநீர், பனங்கற்கண்டு போன்ற பனைமரம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும் இதுவே இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

 

இந்நிலையில் சில சமூக விரோதிகள் சட்டவிரோதமாக எங்கள் பகுதியில் உள்ள இந்த பனை மரங்களை வெட்டுவதற்கு ரகசியமாக முயற்சிக்கின்றனர். மேலும் சில பனை மரங்களை வெட்டியும் உள்ளனர்.

எனவே, பல்வேறு பயன்களை தரக்கூடிய பனை மரங்களை எந்தவொரு நபரும் எந்த வகையிலும் பனை மரங்களை வெட்டுவதையும் அல்லது அகற்றுவதையும் தடுக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ராஜா மற்றும் மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சூரிய மின் சக்தி அமைப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று 344 பனை மரங்களை வெட்டியுள்ளனர். இதனை அறிந்து அவர்களிடம் இருந்து வெட்டிய பனை மரங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மேலும் தமிழகம் முழுவதும் பனை மரங்களை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.