கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர், நாள்தோறும் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவு வரவேற்பை பெற்றுள்ளது.

 

கொலை வழக்கில் மாணவன்


மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த ஒருவர், சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக, கூடல்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் சரண் அடைந்தார். பின்னர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த மதுரைக் கிளை நீதிபதிகள், அவருக்கு ஜாமீன் வழங்கி கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இந்தநிலையில், அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

 


 

நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும்


இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் சட்டக்கல்லூரி மாணவர். அவருக்கு இந்த மாதம் தேர்வு நடக்க உள்ளது. எனவே ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு இந்த கோர்ட்டு சில நிபந்தனைகள் விதிக்க விரும்புகிறது. அதன்படி மனுதாரர் தேர்வு நாட்களை தவிர, நாள்தோறும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 8 வாரம் சேவை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.