மதுரை ஐயர்பங்களா பகுதியில் நடைபெறும் குணா குகை கண்காட்சியில் முறையான சுகாதார வசதி, தரமான உணவு, வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தக் கோரிய வழக்கு.
மதுரையில் குணா குகை கண்காட்சி
மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த சபீனா பானு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், " மதுரை ஐயர்பங்களா பகுதியில் "குணா குகை கண்காட்சி" செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அங்கு வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை. ஆகவே மதுரை ஐயர்பங்களா பகுதியில் குணா குகை கண்காட்சியை நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, முறையான சுகாதார வசதி, தரமான உணவு, வாகன நிறுத்த வசதி போன்றவற்றை செய்து தருவதை உறுதிப்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் என்ன செய்வது?
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு, " பொதுமக்கள் அதிகம் கூடும் கண்காட்சிகளுக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது? மிகவும் நெருக்கடியான சூழலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பி, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.