மகாவிஷ்ணு அரசுப் பள்ளியில் பேசிய விவகாரம் சர்ச்சையான நிலையில் அதன் எதிரொலியாக அரசு சார்ந்த இடங்களில் சமூக செயற்பாட்டாளர்களுக்கான அனுமதியில் தடை உருவாகியுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


LGBTQIA+ சமூக செயற்பாட்டாளர் பங்கேற்றபு


மதுரை அரசு மருத்துவகல்லூரி வளாகத்தில் விழுதுகள் 84 என்ற பெயரில் 1984ஆம் ஆண்டு படித்து மருத்துவர்கள் சார்பில்  கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் LGBTQIA+ சமூகத்தினருக்கான மருத்துவ தேவைகள் மற்றும் பிரச்னைகள், சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் தொடர்பாக LGBTQIA+ சமூக செயற்பாட்டாளர் அழகுஜெகன் பேசுவதற்காக சிறப்பு அழைப்பாளராக வருவதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முன்னாள் டீனிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான பேனர்கள் மருத்துவகல்லூரியில் வைக்கப்பட்டிருந்தபோது தற்போதைய டீன் தரப்பில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தாங்கள் ஏற்கனவே அனுமதி பெற்றுவிட்டதாகவும், ஏராளமான மாணவர்கள் இதில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் கூறி கூட்டம் தொடங்கியுள்ளது. அப்போது LGBTQIA+ சமூக செயற்பாட்டாளர் அழகுஜெகனும் பங்கேற்ற நிலையில் கூட்டம் தொடங்கியது. 


மருத்துவம் சார்ந்து தான் பேசவேண்டும்


அப்போது நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென அங்கு வந்த மருத்துவகல்லூரி நிர்வாகத்தினர் இதுபோன்ற கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என கூறி திடீரென மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே வேறொரு மைக்கை எடுத்து மாணவர்கள் வெளியேறுங்கள் என கூறி வெளியேற்றினர். இதனைத்தொடர்ந்து ஏன் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டதற்கு இங்கு மருத்துவம் சார்ந்து தான் பேசவேண்டும் என கூறியபோது LGBTQIA+ சமூகத்தினருக்கான மருத்துவ ஆலோசனைதான், ஏற்கனவே பதிவு செய்த மாணவர்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள் என கூறியபோதும் அதனை கண்டுகொள்ளவில்லை. மருத்துவகல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த மருத்துவர்கள் LGBTQIA+ சமூக செயற்பாட்டாளர் பேச அனுமதியில்லை இதனை கேட்க கூடாது  என மாணாக்கர்களை எச்சரித்தால் நிகழ்ச்சியின் பாதியில் வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பாதியிலயே வெளியேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


இதனைத்தொடர்ந்து LGBTQIA+ சமூக செயற்பாட்டாளர் அழகு ஜெகன் 90 சதவிகித  காலி இருக்கைகளை பார்த்து பேசிக்கொண்டிருந்த நிலை ஏற்பட்டது. மேலும் இது போன்ற தீண்டாமை போக்கு மருத்துவர்கள் மூலமாக நடைபெறும் என எதிர்பார்க்கவில்லை என பேசிக்கொண்டிருந்தபோதே 12 மணி நிகழ்ச்சி உள்ளது என கூறி அடுத்த மீட்டிங்கிற்கான மருத்துவர்கள் திடிரென மேடைக்குவருகை தந்து அமர்ந்தனர். இதனையடுத்து LGBTQIA+ சமூகத்தினருக்கான மருத்துவம் தொடர்பாக அரசு மருத்துவகல்லூரி வளாகத்திலே பேசக்கூடாது என கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும், LGBTQIA+ சமூக செயற்பாட்டாளர்களையும் பாதியிலயே வெளியேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மருத்துவ கல்லூரி டீன் விளக்கம்


இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் விளக்கம் கேட்டபோது: இந்த நிகழ்ச்சிக்கான கூட்டரங்கு அறைக்கு மட்டுமே அனுமதி கேட்டுள்ளனர்.  மருத்துவத்துறை அல்லாத நபர்கள் மருத்துவகல்லூரியில் பேச அனுமதியில்லை என கூறப்பட்டதாகவும், ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக அறிவுறுத்திய நிலையிலும் LGBTQIA+ சமூக செயற்பாட்டாளரை பேச அழைத்துவந்ததால் அவர் ஏதேனும் மருத்துவம் அல்லாத தவறான கருத்துகளை பேசிவிட வாய்ப்பாக அமைந்துவிடும் என மாணாக்கர்களை வெளியேற்ற கூறப்பட்டதாகவும் தெரிவித்தார். 


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சென்னை, கோவை, மதுரை.. பெருநகரங்களில் இதய நோய் பாதிப்பு அதிகரிப்பு? - நிபுணர்கள் எச்சரிக்கை..