மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கை திருநம்பிகளுக்கான ஹார்மோன் ஊசிகள் மற்றும் மருந்து தட்டுப்பாடு என திருநங்கை புகார் தெரிவித்துள்ளார்.

 

வார்டுகளில் உள்ள திருநம்பிகளிடம் சில திருநங்கைகள் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக  திருநங்கை அமைப்பினர் குற்றச்சாட்டு.

 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் அதிகளவு நோயாளிகள் வந்து செல்கின்றனர். தென் மாவட்டத்தில் முக்கியமான மருத்துவமனையாக இருப்பதால், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் என பல இடங்களில் இருந்து வந்து செல்கின்றனர். ஏராளமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கென இயங்கும் மருத்துவ பிரிவில் திருநங்கை, திருநம்பிகளுக்கான ஹார்மோன் ஊசிகள் மற்றும் மருந்து தட்டுப்பாடு என திருநங்கை புகார் தெரிவித்துள்ளனர்.

 


 

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான சிறப்பு சிகிச்சை


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு  நாள்தோறும் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திருநம்பிகள், திருநங்கைகள் பல்வேறு வகையான சிகிச்சை பெற்றுவருகின்றனர். வாரம் ஒன்றிற்கு மூன்று முதல் நான்கு திருநம்பிகளுக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருநம்பிகளாக மாறுகிறவர்களுக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்து  சிறப்பு பிரிவில்  (வார்டில்) அனுமதிக்கப்பட்ட திருநம்பிகளை பார்க்க வரும் திருநங்கைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருநம்பி ஒருவரிடம் திருச்சியை சேர்ந்த திருநங்கை  இடையூறாக நடந்துகொண்டதாகவும், இது அந்த வார்டில் உள்ள மற்ற நோயாளிகள் செவிலியர்களை  முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வார்டில் சிகிச்சை பெற்று வரும் சிலர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

 

ஊசி மருந்து தட்டுப்பாடு


 

இதுகுறித்து திருநங்கை இனியா கூறும் போது, “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருநம்பி மற்றும் திருநங்கைகளுக்கு ஹார்மோனுக்காக Testoviron என்னும் ஊசி மருந்து தட்டுப்பாடு உள்ளதாகவும் மூன்று நாள் மருத்துவமனையில் தங்கி இருந்தால்தான் இந்த ஊசி மருந்தை தருவதாகவும் கூறுகின்றனர். நாங்கள் தினமும் ஏதாவது வேலை பார்த்தால் தான் பிழைப்பு நடத்த முடியும் என்றும் இந்த ஊசி மருந்துக்கு  சில தொண்டு நிறுவனங்கள் 500 ரூபாய் கேட்பதாகவும் கூறினார். அதோடு திருநம்பி திருநங்கைகள் வார்டில் திருநங்கைகள் அட்டகாசம் தினமும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது இதற்கு மருத்துவமனை நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார்.