மதுரை தெற்குவாசல் பகுதியில் (DYFI) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்ற தலைப்பிலான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகரக் காவல் ஆணையர்  நரேந்திரன் நாயர், அரசு மருத்துவமனை முதல்வர் ரத்னவேல், மாநகராட்சி துணைமேயர் நாகராஜன், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரக் கதிரவன் மற்றும் நடிகர் விஜய் மக்கள் இயக்கம், நடிகர் சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மன்றத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து போதையற்ற தமிழகம் என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயத்தினை மாநகர் காவல் ஆணையர் தொடங்கிவைத்து கையெழுத்திட்டனர். 




 

இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யாழினி என்ற பள்ளி மாணவி போதையற்ற தமிழகம் குறித்தும், போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அடங்கிய ஓவியத்தினை மாநகர காவல் ஆணையரிடம் வழங்கினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர்.ரத்னவேல் பேசியபோது," மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 6ஆண்டுகளில் 1600பேர் போதை பழக்க மறுவாழ்வு சிகிச்சை மையத்தின் மூலமாக சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் அதிகளவிற்கான மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா, மது, மற்றும் பல்வேறு விதமான போதைகளுக்கு அடிமையாகி சிகிச்சை பெறும் நிலை அதிகரித்துவருவது வருத்தமளிக்கிறது.



 

சிகிச்சை பெறும் மாணவர்களின் குடும்பத்தினரிடமோ, நண்பர்களிடமோ கேட்டால் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தால் ரகசியம் காக்க வேண்டும்.  அப்படி செய்தால் பல்வேறு புகார்கள் வரும். போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க முடியும். எனவே காவல்துறை உரிய ரகசியம் பாதுகாக்க வேண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.