தனியார் மருத்துவமனையை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தலைசுற்றல் பிரச்சனையை துல்லியமாக  வீடியோவுடன் கண்டறிய கூடிய வீடியோ நிஸ்டாக்மோகிராபி பரிசோதனை இலவச சிகிச்சை மையம் திறப்பு.

 

வீடியோ நிஸ்டாக்மோகிராபி பரிசோதனை

 

தனியார் மருத்துவமனையை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள காது மூக்கு தொண்டை பிரிவில் வீடியோ நிஸ்டாக்மோகிராபி பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது. இதனை அரசு மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் மற்றும் தேசிய மருத்துவ ஆணையக் குழு உறுப்பினர் டாக்டர் செந்தில், ENT துறை தலைவர் டாக்டர். அழகுவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு தலைசுற்றலுக்கான வீடியோ நிஸ்டாக்மோகிராபி சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தனர்.

 

தமிழகத்தில் முறை

 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவகல்லூரி முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் பேசியபோது...,”வீடியோ நிஸ்டாக்மோகிராபி சிகிச்சை மையம் முதன்முறையாக தமிழகத்தில் இங்குதான் தொடங்கியுள்ளோம்.  இதன் மூலமாக தலைச்சுற்றல் பாதிப்போடு வரும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தலைசுற்றலுக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க முடியும்.  தலைசுற்றல் உடலில் எந்த பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, என்பதை கண்டறிய முதன்முறையாக VNG என்ற வீடியோ மூலமாக கண் அசைவுகளை கண்டறியும் முறையில் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த பரிசோதனை குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும், இந்த பரிசோதனை தனியார் மருத்துவமனைகளில் 4 ஆயிரம் முதல் 5ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தப்படக்கூடிய நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த சிகிச்சை மற்றும் பரிசோதனை இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. 

 

சிகிச்சை மையம்

 

பல்வேறு காரணங்களினால் தலைசுற்றல் உருவாகக்கூடிய நிலையில் இது போன்ற அதிநவீன சிகிச்சை மையத்தால் நோயாளிகளுடைய பாதிப்பை கண்டறிந்த அதற்கேற்ற தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகளின் பாதிப்பை எளிதில் குணப்படுத்தமுடியும் எனவும், வருங்காலத்தில் இந்த சிகிச்சை மையத்தை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்

 

மதுரையில் டெங்கு பாதிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர்? 

 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 22 பெரியவர்கள் 44 சிறுவர்கள் என ஒட்டுமொத்தமாக 64 பேருக்கு காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்ட நிலையில் 2 பேருக்கு டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெளி நோயாளியாக நாள்தோறும் 20 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து மதுரையில் பல்வேறு பகுதிகளில் அரசு ராஜாஜி மருத்துவமனை மூலமாக காய்ச்சல் சிறப்பு சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டுவருகிறது. முகாமில் பரிசோதித்து உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் அந்த நோயாளிக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கான சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.