தமிழக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும் மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ நமது ஏ.பி.பி நாடு தளத்திற்கு தனி பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது.

 

பிளவுபட்டுக் கிடக்கும் அ.தி.மு.க., 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலுக்குள் ஒன்றிணையுமா? என்ற கேள்விக்கு.

 

அ.தி.மு.க., ஒன்றிணைந்து தான் இருக்கிறது. சில தலைவர்கள் மட்டும் தான் பிரிந்து சென்றுவிட்டார்கள். அ.தி.மு.க.,வின் சின்னம், கொடி, கட்சி எங்கு இருக்கிறதோ அங்கு தான் தொண்டர்களும் இருப்பார்கள். தற்போது எடப்பாடியாரின் பின்னால் தான் அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டர்கள் அனைவரும் இருக்கின்றனர். அண்ணா இருக்கும் போது கூட, கூட்டுப் பொறுப்பாக இருந்தது. தற்போது கூட அண்ணா இருந்தது போல கூட்டுத் தலைமையாக இருக்கிறது. அ.தி.மு.க. பிரிந்து இருப்பதாக ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது மத்தியில் யார் ஆளவேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக நடந்த தேர்தல். தற்போது 2026-ல் நடக்கப்போற தேர்தல், தமிழகத்தில் யார் சிறந்தவர், யார் களத்தில் நிற்பவர்கள், யார் சிறப்பாக ஆட்சி செய்வார்கள் என்று முடிவு செய்து வாக்களிக்கும் தேர்தல். அதனால் அ.தி.மு.க.வை தான் மக்கள் தேர்வு செய்யப்போகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது, 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கிக்கொடுத்து, சட்ட ஒழுங்கை முறையாக கையாண்டது, காவிரி குண்டாறு உள்ளிட்ட நல்ல திட்டங்களை கொண்டுவந்தது, உள்ளிட்டவற்றை வைத்து மக்கள் முடிவு எடுப்பார்கள். வறட்சியான பகுதியை பசுமையான பூமியாக மாற்றியுள்ளார். ஆனால் தற்போதைய முதல்வர் 3 ஆண்டு ஆட்சி நிறைவு பெற்றும் தேர்தல் வாக்குறுதிகளை கூட செய்து கொடுக்கவில்லை” என்றார்.

 

அ.தி.மு.க.,வில் பிரிந்து போன தலைவர்கள் ஒன்று சேர்ந்து வெற்றிக்கு வழி சேர்க்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்களே? நீங்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை.

 

பிரிந்துபோன எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்து இல்லை. அதையெல்லாம் தலைவர்கள் பார்த்து முடிவு செய்துகொள்வார்கள். தேர்தலை நோக்கி போகும் போது எந்த ஒரு பிரச்சினையும் இல்லாம தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். புரட்சித்தலைவர் அம்மா, புரட்சித்தலைவரின் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

 

முக்குலத்தோர் வாக்குகள் சிதறிக்கிடக்கிறது என்று சொல்லப்படுவது உண்மையா?

 

நிச்சயமாக அப்படி இருக்காது. நாங்க எல்லாம் முக்குலத்தோர் தான். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் எடப்பாடியாரோடு ஒற்றுமையாக செயல்படுகிறோம். அண்ணன் மூத்த தலைவர் கருப்பசாமி பாண்டியன் தென் மாவட்டங்களில் இருக்கிறார். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து சிறப்பாக செயல்படுகிறோம்.

 

தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த கேள்விக்கு!

 

 இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில், இந்தியா தான் உதவி செய்தது. அதைக் கூட கருத்தில் கொள்ளாமல் அவர்கள் கண்மூடித்தனமாக மீனவர்களை சுட்டுக் கொலை செய்கின்றனர். அடிக்கடி துன்புறுத்தப்படுகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை தமிழக அரசியல் வேடிக்கை பார்க்கிறது. அம்மா அவர்கள் 10 ஆண்டு முதலமைச்சராக இருந்தபோதும், எடப்பாடியார் முதல்வராக இருந்த போது இவ்வளவு பிரச்னைகள் வந்ததில்லை. ஆனால் தி.மு.க., அரசு இதனை கண்டுகொள்ளாமல் பதவி சுகத்தை மட்டும் அனுபவிக்கிறது.

 

பள்ளி மாணவர்களின் புத்தக விலை ஏற்றம் குறித்த கேள்விக்கு

 

 இந்த ஆட்சியில் பல்வேறு வகையான முறையில் கட்டண உயர்வு ஏற்படுகிறது. அம்மா ஆட்சி காலத்தில் 5-ம் வகுப்புவரை புத்தகங்களை இலவசமாக கொடுத்தார். 16 வகையான பொருட்கள் கொடுத்தார். இந்த அரசாங்கம் அம்மா ஆட்சிகால திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டது. இதனை சரிசெய்ய வேண்டும்.

 

தமிழக வெற்றிக் கழக கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதாக சொல்லப்படும் கேள்விக்கு

 

பொதுவாக தி.மு.கவிற்கு யாரும் எதிரியாக வந்து விடக்கூடாது. தன்னுடைய ஆட்சிக்கு எந்த பாதகமும் வரக்கூடாது என்பதற்காக பயந்து, பயந்து செயல்படுவார்கள். அப்படி இடையூறு இருந்தால் விஜய் நீதிமன்றம் சென்றால் அதற்கு நீதி கிடைக்கும். இவை செவிவழி செய்திதான் உண்மையில் நடப்பதை பார்ப்போம். அதன்பின் கருத்து சொல்கிறேன்.

 

திருமாவளனன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு


தலித்களும் முதல்வராக முடியும். எங்களுடைய ஆட்சி காலத்தில் முதல்வரே வணங்கக்கூடிய சபாநாயகர் இடத்தில் தனபால் அவர்களை அமரவைத்து அழகுபார்த்தார் அம்மையார் ஜெயலலிதா. அதனால் யாரும் முதல்வராக முடியும். திராவிட கட்சி வழிவந்த அதிமுகவில் அம்மையார் ஜெயலலிதா முதல்வராக வந்தார். அவரை யாரும் சாதி பார்த்து ஓட்டுபோடவில்லை. எம்.ஜி.ஆர்., அவர்களை யாரும் சாதிபார்த்து ஓட்டுபோடவில்லை என்றார்.


- Thangalaan Movie Review : அடிமைத்தனத்தில் இருந்து மீட்டதா தங்கம்? விக்ரமின் தங்கலான் பட விமர்சனம் இதோ