கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் நகைகளை அடகு வைத்த காவல் ஆய்வாளர், நகை திரும்ப ஒப்படைக்காததால் கைது செய்யப்பட்டார்.


கணவன் - மனைவி பிரச்னையை விசாரித்த பெண் இன்ஸ்பெக்டர்


மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் கீதா. இந்த நிலையில் கடந்த  ஏப்ரல் மாதம் திருமங்கலத்தை சேர்ந்த ரவி என்பவரது மகன் ராஜேஷ்குமார் 33 பெங்களூரில் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்புதூரைச் சேர்ந்த ரவி என்பவரது மகள் அபிநயா 30 சென்னையில் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்குமான மோதல் அதிகரிக்கவே திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. 


102 பவுன் நகைகள் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு


விசாரணையின் போது கணவருடன் இனி சேர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவே, திருமணத்தின்போது தனது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா தரப்பு ஆய்வாளரிடம் சொன்னதாக, கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேஷிடம் அபிநயாவின் நகைகளை கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆய்வாளர் கீதா கூறியதை தொடர்ந்து, 102 பவுன் நகைகளை ராஜேஷ்குமார் ஆய்வாளர் கீதாவிடம் கடந்த ஏப்ரல் மாதம்  ஒப்படைத்துள்ளார். ஆனால் அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல் ஆய்வாளர் கீதா காலம் தாழ்த்தி வந்துள்ளார். 


மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர்


இந்நிலையில் அபிநயாவின் குடும்பத்தினர் நகைகளை தராமல் ஏமாற்றுவதாக ராஜேஷ் குடும்பத்தினருடன் தகராறு செய்ததாக தெரிய வருகிறது. அதற்கு ராஜேஷ் தன்னிடம் நகை இல்லை எனவும் காவல் நிலையத்தில் ஆய்வாளர் கீதாவிடம் ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். பெண் வீட்டார் தகராறு செய்ததால் ஆத்திரமுற்ற ராஜேஷ் குமார் ஆய்வாளர் கீதாவிடம் நகைகளை பெண் வீட்டாரிடம் கொடுக்கும்படி கூறியதாகவும், அதற்கு ஆய்வாளர் கீதா நகைகளை கொடுக்க முடியாது யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து புகார் தொடர்பாக டிஎஸ்பி அலுவலகம் ஆய்வாளரிடம் நடத்திய விசாரணையில் அனைத்து நகைகளையும் காவல் ஆய்வாளர் கீதா தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து நடத்திய பேச்சு வார்த்தையில் நகையை திருப்பி தருவதற்கு ஆய்வாளர் கீதா கால அவகாசம் கேட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.


நகையை சுருட்ட ஆசை


இந்த நிலையில் கடந்த மே மாதம்  அடகு வைத்த நகைகளில் 20 பவுன் நகைகளை மட்டும் கீதா திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி 82பவுன் நகைகளை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் சம்பவம் தொடர்பாக நேரடியாக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்திய மதுரை சரக டி.ஐ.ஜி., ரம்யபாரதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அடகு வைத்த நகைகளையும் திருப்பி கொடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் காவல் ஆய்வாளர் கீதா இரண்டு தவணைகளாக 50 பவுன் நகைகளை திரும்ப ஒப்படைத்துள்ளார். மீதமுள்ள நகைகளை ஒப்படைக்குமாறு கேட்டு ராஜேஷ்குமாரின் தந்தை பலமுறை காவல் ஆய்வாளர் கீதாவை தொடர்பு கொண்ட போது தர மறுத்ததாக சொல்லப்படுகிறது. பலமுறை கேட்டும் மீதம் உள்ள 32 பவுன் தங்க நகைகளை திரும்ப ஒப்படைக்காததால் ராஜேஷ் குமார் தந்தை ரவி திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


பெண் இன்ஸ்பெக்டர் கைது


இதைத் தொடர்ந்து டிஐஜி உத்தரவின் பேரில் திருமங்கலம் போலீசார் காவல் ஆய்வாளர் கீதா மீது 406, 420 ஐபிசி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கீதாவை கைது செய்தனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நகைகளை மீட்டுத்தர காவல் நிலையத்தை நாடிய பெண்ணின் நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டிய  பெண் காவல் ஆய்வாளரே தன்னிடம் ஒப்படைத்த நகைகளை அடகு வைத்து, அதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரும் அடகு வைத்த நகைகளை திரும்ப ஒப்படைக்காததால், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பதவி வகித்திருந்த கீதா கைது செய்யப்பட்ட சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.