தேனியில் கேட்ட துப்பாக்கி சத்தம்.. காயத்துடன் மதுரையில் சிகிச்சையில் பொன்வண்ணன்
தேனியில் இருந்த பொன்வண்ணன் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.
Continues below advertisement

துப்பாக்கி சூடு
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொன்வண்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட காவலர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் இரண்டு தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அருகில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலின்போது காவலருடன் உடனிருந்த அவரது உறவினரான ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க கோரியும், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவலரின் உடல் வைக்கப்பட்டிருந்த, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டியில் போராட்டம்
தொடர்ந்து உடற்கூறாய்வு முடிந்த காவலரின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், பார்வட் ப்ளாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கதிரவன், பார்வட் ப்ளாக் தலைவர் முருகன் ஜீ தலைமையிலான நிர்வாகிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மட்டுமல்லாது உசிலம்பட்டி தேவர் சிலை முன்பும் ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. அஷிஷ் ராவத், உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
21 குண்டுகள் முழங்க காவலரின் உடல்
இந்த சூழலில் இன்று திமுக சார்பில் 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், அரசின் நிவாரண நிதி மற்றும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உசிலம்பட்டி திமுக நிர்வாகிகள் உறுதியளித்தை அடுத்து காவலரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக சொந்த ஊரான கள்ளப்பட்டி மயானத்திற்கு காவலரின் பூத உடல் கொண்டு செல்லப்பட்டு விருதுநகர் மாவட்ட எஸ்.பி., கண்ணன் தலைமையில் காவல்துறையின் அரசு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க காவலரின் உடல் உறவினர்கள் முன்னிலையில் எரியூட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
துப்பாக்கி சூடு
இந்தநிலையில், காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேர் கம்பம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதன் அடிப்படையில் கம்பம் பகுதியில் கொலையாளிகள் அடையாளம் கண்டுபிடிக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், கொலையாளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பொன்வண்ணன் (35) என்பவருக்கு காலில் அடிபட்டது. இரண்டு பேர் தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையில் சிகிச்சை
இதில் படுகாயமடைந்த பொன்வண்ணன் கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக தேனியில் இருந்த பொன்வண்ணன் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.