மதுரை மாநகராட்சி ஊழலுக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பதுதான் மதுரையை தாண்டி தமிழக முழுவதும் டாக் ஆப் கேள்வியாக உள்ளது என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
ரூ.250 கோடி அளவில் வருமானம் வந்திருக்கும்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில்..” மதுரை 4.12 லட்சம் கட்டடங்களைக் கொண்டு தமிழகத்தில் 3-வது இடத்தில் உள்ளது. மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பதிலே ரூ.250 கோடிக்கு மேல அளவில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழலுக்கு பின்புலமா இருப்பது யார்? என்பதுதான் மதுரை என்பதை தாண்டி தமிழகம் முழுவதும் டாக் ஆப் கேள்வியாக உள்ளது. மதுரையில் ஊழல் நடைபெற்றது, மக்களுக்கு வேதனையாக உள்ளது.
ஊழலுக்கு அடித்தளமாக இருப்பது யார்?
மதுரை மாநகராட்சியில் நடப்பாண்டில் கூட ரூ.1,480 கோடி பட்ஜெட் தாக்கல் செய்து, அதில் 370 கோடி சொத்துவரி காட்டப்பட்டுள்ளது. ஆனால் சொத்து உயர்வினால் கூடுதலாக ரூ.250 கோடி அளவில் வருமானம் வந்திருக்கும் என்று பல்வேறு நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக 4.12 லட்சம் மேற்பட்ட சொத்துவரி கட்டிடங்களில், 3 லட்சத்திற்கு மேலாக வணிக கட்டடங்கள் உள்ளது. குறிப்பாக கடந்த 2022 முதல் வணிக கட்டணங்களுக்கு குடியிருப்பு கட்டணம் நிர்ணயம் செய்து மிக பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழலுக்கு அடித்தளமாக இருப்பது யார்?
கண் துடைப்பாக போய்விடுமோ
தற்போது ரூ.250 கோடி உண்மை நிலை என்ன? மதுரையில் 5 மண்டல தலைவர்களையும், இரு நிலைக் குழு தலைவர்களையும் ராஜினாமா செய்ய சொல்லி திமுக கட்சி தலைமை உத்தரவிட்டு அவர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்? இதுவரை மதுரை மாநகராட்சி வரலாற்றிலே இப்படி ஐந்து மண்டல தலைவர்கள் ஊழலுக்காக, மக்கள் பணத்தை கையாடல் செய்ததற்காக ராஜினாமா செய்த வரலாறு மதுரை மாநகராட்சியில் இதுவரை பார்த்தது இல்லை?.
உண்மை குற்றவாளிகள் யார்?
இந்த குற்றத்திற்கு பின்புலமாக இருக்கும் உண்மை குற்றவாளிகள் யார்?. இது சாதாரணமாக நடைபெற்று இருக்க முடியாது, என்று எல்லோரும் அறிந்த ஒன்று. அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த குற்ற செயல்களில் ஊழலில் ஈடுபட்ட அதிகார வர்க்கத்தை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதுதான் மதுரை மக்களுடைய உண்மையான எதிர்பார்ப்பு. ஆனால் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு கண் துடைப்பாக போய்விடுமோ? என்கிற கவலையோடு, அச்சமும் மக்கள் மத்தியில் இருக்கிறது.
மதுரை மக்களை காப்பாற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா?
ஆளுகிற கட்சி என்ற அந்த அதிகாரத்திற்குள்ளே இருந்து அவர்கள் தப்பித்துக் கொண்டால் நிச்சயமாக மக்கள் தண்டனையில் இருந்து அவர்கள் தப்ப முடியாது. மதுரை மாநகராட்சியினுடைய முறைகேடு, ஊழலுக்கு என எந்த தீர்ப்பில் இருந்து இவர்கள் தப்பினாலும் மக்கள் தீர்ப்பிருந்து, ஆண்டவன் தீர்ப்பிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை அரசிற்கு வைக்கிறேன். மதுரை மக்களை காப்பாற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா? அல்லது எப்போதும் போல கைவிட்டு விடுமா? என கேள்வி எழுப்பினார்.