புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கலைக்குமார். இவரது மனைவியும் ஆசிரியர். கடந்த 2011ஆம் ஆண்டு கணவன், மனைவி இருவரும் பள்ளிக்கு சென்று விட, இவர்களின் 15 வயது மகளும், 5 வயது மகனும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து சடலத்தை தூக்கில் தொங்க விட்டனர். பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வழக்கு 2011ஆம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் வழக்கு விசாரணை 2013ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ போலீஸாராலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இயலவில்லை. இதையடுத்து வழக்கை முடிவுக்கு கொண்டு வருமாறு திருச்சி முதன்மை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

 

இந்நிலையில், தன் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால், தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 கோடி இழப்பீடு வழங்க கோரி, கலைக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.இந்த மனுவை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். அரசு தரப்பில் மனுதாரருக்கு 3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு திட்டத்தின் மனுதாரருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே 3 லட்சம் வழங்கப்பட்டிருப்பதால், 7 லட்சத்தை 2 மாதத்தில் மனுதாரருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 



சொந்த மகனிடம் இருந்து சொத்தை மீட்டுத்தர கோரி முதியவர் தொடர்ந்த  வழக்கு - நடவடிக்கை எடுக்க மதுரை கமிஷனருக்கு உத்தரவு

 

மதுரையை சேர்ந்த பிச்சையம்மாள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"எனக்கு சொந்தமாக மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரம்ரோடு பகுதியில் ஒரு சொத்து இருந்தது. இந்த சொத்து எனது சம்மதத்துடன் என் மகன் பெயருக்கு மாற்றப்பட்டது.தற்போது எனக்கு 69 வயதாகிறது. ஆனால் எனது மகன் என்னை முறையாக கவனிப்பதில்லை. எனவே என்னுடைய சொத்தை என் மகனிடம் இருந்து மீட்டுத்தரும்படி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவின் அடிப்படையில் என்னுடைய சொத்தை மீண்டும் ஒப்படைக்கும்படி கடந்த 12.11.2021 அன்று மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார். ஆனால், அதிகாரிகள் இதுவரை சொத்துக்களை மீட்டு என்னிடம் ஒப்படைக்கவில்லை. எனவே, என்னுடைய சொத்தை, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மீட்டு என்னிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட வேண்டும்" என  கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுதாரர் தனது சொந்த மகனால் துன்புறுத்தப்படுவதாலும், அவர் முதியவர் என்பதாலும் அவரை மீட்க வேண்டிய தேவை இந்த நீதிமன்றத்திற்கு உள்ளது. அந்த வகையில் மனுதாரருக்கு சொந்தமான சொத்தில் இருந்து அவரது மகன், மருமகளை 4 வாரத்தில் வெளியேற்றி, சொத்தை அவர்களிடம் இருந்து மீட்டு மனுதாரரிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கையை மதுரை மாநகர காவல் ஆணையர் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.