அழகான அரிட்டாபட்டி

 

கிராமத்த சுத்தி ஏழு மலை இருக்கு. அதனாலதான் என்னவோ இயற்கை எழில் கொஞ்சுது. அரிய வகை பறவைகள் நடமாட்டம் இருக்கும் கிராமம் தான் அரிட்டாபட்டி. அதனால சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு தூய்மையா இருக்குனு கணிக்க முடியும். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது அரிட்டாபட்டி கிராமம். ஊர சுத்தி விவசாயம். வாழை, கரும்பு, கத்திரி, வெண்டி, கருணைனு பலதரப்பட்ட விவசாயம் நடக்குது. மலை உச்சில இருந்து பார்த்தா கோழி கொண்ட பூவு கலர் கண்ண பறிக்கும்.

 

பச்ச பசேல்னு தெரியுற பச்ச நெல்லு தோகை நெஞ்சையும் குளு, குளுக்க வைக்கும். வடக்குப்புறமா, அழகர்கோயில் சாலை வழியா வந்தா சின்னையன் கோயில் மண் குதிரை கிராமத்து பாரம்பரியத்த சொல்லும். "பொட்டல காத்தவரு சின்னையன், பொடவ காத்தவரு பெரியையன்" சொலவடையோட சாமிய வேண்டிக்குவாங்க. காலார நடக்கும் போது ரோட்டோர தென்னமர நிழல்ல நிண்டுதே போவோம். எதிர்க்க ஆடு, மாடுகள பத்தியாரும் ஆயாக்களும், தாத்தாக்களும் கம்பு கட்டி  கொண்டாரும் தூக்குப்போணி ஆடுறதே அழகு தான். ஊரு மந்தைல பீடி பத்தவைக்கும் பெருசுக பேசும் கதை ஆயிரம். குட்டிக், குட்டிக் டீ கடையில கூட டீத்தண்ணி அருமையா இருக்கும்.

 

கிராமத்தின் பெருமை

 


அங்கையே இட்லி, வடையும் கிடைக்கும். தவக்குற பிள்ளைக்கு துண்ட கட்டி நடை பழகிவிடும் தாத்தாக்கள் பாசத்த காண முடியும். கிள்ளி போட்ட வெற்றிலையில,  டச்சு ஸ்கிரீன தேய்கிறது மாதிரி சுண்ணாம்ப தேய்க்குற பாட்டிக கை காச்சு போயிருக்கும். விடிய காலையில பருத்திப்பாலும், பணியாரமும் கேட்டு அழுகுற பிள்ளைகள பார்க்க முடியும். ஆடிக்காருக்குக் கூட இத்தனதடவ கிளினிங் ஆயில் போட மாட்டாங்க. நம்ம ஊரு அண்ணெங்க சைக்கிளுக்கு தேங்கா எண்ணெய் தேய்ச்சு கெத்து காட்டுறதே தனி தான்.   நீளமான ஏரியா, சந்து பொந்து எல்லாமே தெருவுல இருக்கும். மாடுபிடி வீரர்களையும், காவல்துறை பணியாளர்களையும் இன்ஜினியரிங் ஸ்டூடெண்டு மாதிரி எங்க தேடுனாலும் கிடைப்பாங்க. அந்த அளவுக்கு இராணுவம், காவல்துறை பணிய நேசிச்சு போவாங்க. 

 

ராஜாளி ரவி

 

இப்படி அழகும், தொல்லியலும் இருக்கும் அழகான ஊருதான் அரிட்டாபட்டி. இங்கு ஏராளமான பறவைகள் வசித்துவருகிறது. இதை பாதுகாக்க அரசு அரிட்டாபட்டிய பல்லுயிர் பாதுகாப்பு பகுதியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரிட்டாபட்டியில் அரிய வகை உயிரினங்கள் மற்றும் பறவைகள பாதுகாக்கும் விதமாக பறவை கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருகிறது. இதில் பல உயிரின வகை கண்டறியப்பட்டு வருவதாக பறவைகள் ஆர்வலர் ரவி தெரிவித்தார்.

 

மேலும் ரவி நம்மிடம் கூறுகையில்,” எங்கள் கிராமத்தையும், சூழலையும் பாதுகாக்க பல்வேறு போராட்டம் நடத்திவருகிறேன். இதன் பலனாக பல்லுயிர் பாதுகாப்பு தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் எனக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தில் விருது வழங்கப்பட்டுள்ளது. பசுமை விருதினை அமைச்சர் மெய்யனாதன் வழங்கியது குறிப்பிடதக்கது. இந்நிலையில் என்னுடை தொடர் பணியில் பறவைகள் கணக்கெடுப்பை செய்துவருகிறேன். தற்போது மதுரை மாவட்ட வனத்துறை சார்பாக  கணக்கெடுப்பு பணி செய்துவருகிறோம். இதில் என்னுடன் ஒளிப்பதிவுக் கலைஞர் விட்டலா கோபி, அரிட்டாபட்டி பவித்ரன், அரிட்டாபட்டி கருப்பனன் மற்றும் வனக்காவலர் துரைராஜ் ஆகியோர் இணைந்து பணியினை மேற்கொண்டோம். அதில் ராஜாளி கழுகு, புள்ளிக் கழுகு, பாம்பு திண்ணி கழுகு மற்றும் பலவகைப் பறவைகள் கணக்கு எடுக்கப்பட்டது” என்றார்.

 

தொடர்ந்து பறவைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் அரிட்டாபட்டி ரவி மற்றும் அவரது குழுவிற்கு பாராட்டு குவிந்துவருகிறது.