மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது எப்படி ? மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் கோவிந்தப்ப நாச்சியார் பேட்டி.


இந்திய அளவில் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது கலை, இலக்கியம், கல்வி, சேவை, பொதுவாழ்வியல் என பல்வேறு பணிகளை பாராட்டி கொடுக்கப்படும் விருது ஆகும். இந்நிலையில் மதுரையில்  கண் மருத்துவ பணியில் ஈடுபட்டுவரும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு மருத்துவ சேவையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது அறிவித்துள்ளது.


இது குறித்து அரவிந்த் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர். நாச்சியார் செய்தியாளர்களிடம் கூறும் போது, "மருத்துவம் சார்ந்த மக்கள் பணிக்கு எங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தனி நபருக்காக வழங்கப்பட்ட விருது இல்லை. ஒட்டு மொத்தமான எங்களுடைய ஸ்தாபனத்திற்காக வழங்கப்படும் விருது.




ஆரம்ப காலகட்டத்தில் 1976-ல் 12 படுக்கைகளை கொண்டு கண் மருத்துவம் செய்து வந்த நாங்கள் தற்போது தினமும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு கண் தொடர்பான சிகிச்சை அளித்து வருகிறோம். அதேபோல் ஒரு நாளைக்கு 5000 ஆபரேஷன்கள் செய்து வருகிறோம். எங்களிடம் 450 கண் மருத்துவர்கள் உள்ளனர். செவிலியர்கள் 2500 பேர் உள்ளனர். இப்படி ஒட்டு மொத்தம் 6 ஆயிரம் பேர் எங்களுடைய நிறுவனத்தில் பணி செய்கிறோம். 16 இடங்களுக்கு மேல் எங்களுடைய மருத்துவமனை உள்ளது. அதுபோக கண்ணொளி மையம், கிராமபுற முகாம் என பலதரப்பட்ட சேவைகளை செய்து வருகிறோம். 48% இலவசமாகவும், 52% பணம் பெற்றுக் கொண்டும் எங்களுடைய கண் மருத்துவமனையை செயல்படுத்தி வருகிறோம். 




அதிக அளவு நோயாளிகளுக்கு குறைந்த அளவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு மருத்துவம் செய்வதால் எங்களால் சிறப்பாக இயங்க முடிகிறது. அதிகளவு கண் மருத்துவப் பணியில் வேலை செய்வதால் குறைந்த செலவில் தரமான மருத்துவத்தை வழங்குகிறோம். கண் சார்ந்த மருத்துவம் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு கண் மருத்துவம் சார்ந்த பொருளையும் நாங்களே தயாரித்து வருகிறோம். ஆராய்ச்சி நிலையம் முதற்கொண்டு எங்களிடம் உள்ளதால் இதனை சேவையாக செய்ய முடிகிறது. 




20 ரூபாய்க்கு கூட கிராமங்களில் மருத்துவம் செய்கிறோம் இலவசமாகவும் மருத்துவம் செய்கிறோம் கூடுதல் மருத்துவத்திற்கு போதுமான பணம் வாங்கிக் கொள்கிறோம் இப்படி எல்லா தரப்பினருக்கும் நாங்கள் மருத்துவம் செய்வதால் எங்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது.  இதனால் எங்களது மருத்துவ பணிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே எங்கள் மருத்துவமனை இரண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளது. இதோடு மூன்று பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள பெருமையை பெறுகிறோம். இது போன்ற விருது எங்களை ஊக்கப்படுத்துகிறது. இதனால் நாங்கள் மேலும் உற்சாகத்தோடு மருத்துவ பணி ஆற்றுவோம்" என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DMK MLA Son Arrest issue: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை குற்றவாளிகளுக்கு பிணை கொடுக்கக்கூடாது- எவிடென்ஸ் கதிர்


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Voter List: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்?