அழகாய் மாறப்போகுது நம்ம மதுரை... இறுதிக்கட்டத்தில் பணிகள்..இதில் இவ்வளவு வசதிகள் வருகிறதா..?

Madurai Railway Station Renovation: தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டில் இருந்து 1303 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த இலங்கை நாட்டில் உள்ள ரயில் பாதை அளவிற்கு நிகரானது.

Continues below advertisement

தமிழகத்தில் மொத்த ரயில் பாதைகளில் 94 சதவீதம் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன ரயில்வே  தகவல் தெரிவித்துள்ளது.

 

மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் தீவிரம் 

 
மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் இதுவரை கிழக்கு நுழைவாயில் பகுதியில் பல அடுக்கு இருசக்கர வாகன மற்றும் நான்கு சக்கர வாகன காப்பகங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டன. ரயில் பாதைக்கு மேல்புறம் பயணிகள் வசதிகளுக்கான அரங்கு அமைக்கும் பணிக்கான அடித்தளமிடும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல கிழக்கு நுழைவாயில் பகுதியில் முகப்பு கட்டிடம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் பார்சல்களை கையாள தனி நடை மேம்பாலம் அமைக்கும் பணியும், ரயில் நிலையத்தையும் பெரியார் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் சுரங்கப்பாதை பணிகளும் நடைபெற்று வருகின்றன. 
 

ராமேஸ்வரம் ரயில் நிலையம் 

 
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 113 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பார்சல் ஆபீஸ் கட்டுமான பணி நிறைவு பெற்று விட்டது. அதேபோல ரயில் நிலைய நுழைவு வளைவு அருகே இருந்த வணிக வளாக கட்டிடம் பயணிகள் தங்கும் அறைகளாக மாற்றுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.  வடக்கு பகுதியில் ரயில் நிலைய கட்டிடம், ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லும் பயணிகள் சென்றுவர தனி பாதை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றுவிட்டது. கிழக்குப் பகுதியில் ரயில் நிலைய கட்டிடம், ரயில் நிலையத்திற்க்குள் வரும் பயணிகளுக்கு தனி பாதை அமைப்பு, நடைமேடை மேம்பாட்டு பணிகள் மற்றும் உப்பு நீரை குடிநீராக்கும் அமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 

அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் 

 
அம்பாசமுத்திரம், திண்டுக்கல், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, பழனி, பரமக்குடி, புதுக்கோட்டை, ராஜபாளையம், ராமநாதபுரம், சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தி அமிர்த பாரத் ரயில் நிலையங்களாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
 

மத்திய பட்ஜெட் 

 
இந்தப் பணிகளுக்காகவும், தமிழக வளர்ச்சி திட்டங்களுக்காகவும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிதி ஒதுக்கீட்டைக் காட்டிலும் 7.5  மடங்கு அதிகமாகும். தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டில் இருந்து 1303 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த இலங்கை நாட்டில் உள்ள ரயில் பாதை அளவிற்கு நிகரானது. தமிழகத்தில் மொத்த ரயில் பாதைகளில் 94 சதவீதம் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன எனவும் ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
 
Continues below advertisement