உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் காவலரை கத்தியால் குத்தி படுகொலை  செய்து விட்டு தப்பி ஓடிய மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மறுமணம் செய்து கொண்ட காவலர்

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சிவா, நாகையாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பொன்மணி என்பவருடன் திருமணம் ஆகிய சூழலில் ஒரு ஆண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது மனைவி பொன்மணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட, இவரது குழந்தை பொன்மணியின் தாயார் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவலர் சிவா, மங்கல்ரேவைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது சகோதரி இறந்த பின் மறுமணம் செய்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்வதாக எண்ணி சிவாவுடன் பொன்மணியின் சகோதரர் அர்ஜுனன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 


 

கத்தியால் குத்தியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
 


இதனால் மாமியார் வீட்டில் வளர்ந்து வந்த தனது குழந்தையையும் சிவா அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். குழந்தையை அழைத்து சென்றதால் ஆத்திரத்தில் இருந்த சிவாவின் முதல் மனைவி வீட்டார். பாப்பிநாயக்கன்பட்டியில் சக காவலரின் இல்ல விழாவிற்கு இரண்டாவது மனைவியுடன் சிவா வந்திருப்பதை கண்ட இவரது மைத்துனர் அர்ஜுனன் ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து, இல்ல விழாவில் பங்கேற்ற பின் வீடு திரும்பி கொண்டிருந்த காவலர் சிவா-வை கிராமத்தின் அருகிலேயே இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி விட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாறியாக குத்தியதால் காவலர் சிவா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தப்பி ஓடிய மைத்துனர் அர்ஜுனனை தேடி வருகின்றனர்

 

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி செந்தில்குமார், டி.இராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் காவலர் சிவா-வின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து, விட்டு தப்பி ஓடிய மைத்துனர் அர்ஜுனனை தேடி வருகின்றனர்.