ஓடுதள விரிவாக்கம், புதிய வெளிநாட்டு ஒப்பந்த விமான சேவை ஆகிய பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் மத்திய அரசிற்கு கோரிக்கை.

 

24 மணிநேர சேவை தொடக்கம்

 

மதுரை விமான நிலையத்திற்குள் 24 மணி நேரம் சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் சுரேஷ், மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவரும் எம்.பி யுமான மாணிக்கம் தாகூர், இணைத் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி, துணைத் தலைவர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். உடன் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், விமான நிறுவன பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் சென்னை கோவை திருச்சி தூத்துக்குடி மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சென்னை கோவை திருச்சி சர்வதேச விமான நிலையம் ஆகவும் மதுரை தூத்துக்குடி உள்நாட்டு  நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது.

 

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சேவை துவங்கியது

 

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக ஆக்க வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை இருந்து வரும் வேலையிலே முதலில் 24 மணி நேரம் செயல்படும் விமான நிலையமாக மாற்றினால் தான் சர்வதேச அந்தஸ்து கொடுக்க முடியும் என முட்டுக்கட்டை போட்டிருந்தது. 24 மணி நேர விமான சேவை இல்லாததால் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதியில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள் திருவனந்தபுரம், சென்னை ஆகிய விமான நிலையங்களை பயன்படுத்தும் சூழல் இருந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் தென் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் அடிக்கடி இதற்காக குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதமே விமான நிலையத்தை 24 மணி நேரம் செயல்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

 

தற்போது வரை காலை 7 மணி முதல் இரவு 8;35 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த மதுரை விமான நிலையத்தை 24 மணி நேர சேவை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவையை தொடங்குவதற்கு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என விமான நிலைய அதிகாரி தகவல் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்குள் 24 மணி நேரம் சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

 

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்

 

நிகழ்ச்சியை தொடர்ந்து உரையாற்றிய விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்...,” 2010 ஆம் ஆண்டு முதல் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது வெற்றிகரமாக மதுரை விமான நிலையம் 2 மணி நேர சேவையை துவக்கி உள்ளது. அதற்காக பிரதமர் மோடிக்கும் விமானத்துறை அமைச்சரத்திற்கும் நன்றி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் சேவை வழங்கக்கூடிய விமான நிறுவனங்களிடம் தொடர்ந்து பேசி பல்வேறு இடங்களுக்கு மதுரையிலிருந்து விமான சேவையை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.