உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவின் போது பாரம்பரியம் மாறாமல் இன்றளவும், உரலில் இடித்து திருப்பதி லட்டுக்கு இணையான சுவையுடன் புட்டுமாவு உருண்டை தயாரித்து அம்மன் சாமிக்கு படையலிடும் கிராம மக்கள்.

 

உரலில் உலக்கை மாவு இடித்து இந்த புட்டு மாவை தயாரிக்கின்றனர்

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டி கிராமத்தின் பாறையில் அமைந்துள்ளது, செல்லாயி அம்மன் திருக்கோயில். நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டின் புரட்டாசி மாதம் விழா எடுத்து அம்மனுக்கு புட்டுமாவு இடித்து படையலிட்டு வழிபடுவதை கிராம மக்கள் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் கோயில் திருவிழாவில் அரிசி மாவு மூலமே மாவிளக்கு பூஜைக்காக மாவு தயாரிப்பது வழக்கம், ஆனால் இந்த கிராமத்தில் மட்டும் முன்னோர்களின் வழி, வழியாக கடலை மற்றும் கேப்பை மூலம் புட்டுமாவு லட்டு போன்று தயாரித்து படைக்கின்றனர். எத்தனை நவீன கருவிகள் வந்தாலும் இன்றளவும் ஒவ்வொரு வீட்டின் முன்பு உள்ள உரலில் உலக்கை மூலம் ஆண் பெண் பேதமின்றி, இருவரும் இணைந்து மாவு இடித்து இந்த புட்டு மாவை தயாரிக்கின்றனர்.

 


 

திருப்பதி லட்டுக்கு இணையான சுவையானதாக புட்டுமாவு உருண்டைகள்

 

கடலை பருப்பை வறுத்து, வெள்ளத்துடன் உரலில் போட்டு இடித்து கொண்டிருக்கும் போதே, கேப்பையை இடித்து மாவாக்கி புட்டாக அவித்து அதையும் இந்த கடலை மற்றும் வெள்ளத்துடன் சேர்த்து இயற்கை முறையில் தயாரிக்கின்றனர். இந்த மாவினை 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை பாதுகாத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம் எனவும், இன்று உள்ள நவீன உணவு வகைகளை விட ஆரோக்கியமானதாகவும், சத்தாண உணவாக திருப்பதி லட்டுக்கு இணையான சுவையானதாக இந்த புட்டுமாவு உருண்டைகள் இருக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

 


அம்மனைக்கு படையலிட்டு வணங்கி வரும் இந்த கிராம மக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

இந்த ஆண்டு திருவிழா இரண்டு நாள் நடைபெற்று வரும் சூழலில் பாரம்பரியம் மாறாமல் இந்த கிராம மக்கள் இடித்து தயாரிக்கும் இந்த புட்டுமாவு உருண்டைகளை வாங்கி செல்ல அக்கம் பக்க கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் தேடி வருவார்கள் என கூறப்படுகிறது. எத்தனை நவீன உணவுகள் வந்தாலும் இயற்கை முறையில் பாரம்பரியத்துடன் உரலில் உலக்கை மூலம் இடித்து இன்றளவும் அம்மனைக்கு படையலிட்டு வணங்கி வரும் இந்த கிராம மக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது கிராம பெரியவர்கள் கூறுகையில்..,” பாரம்பரிய முறைப்படி நாங்கள் திருவிழா கொண்டாடுவது பலருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் கிராம திருவிழால் கலந்துகொண்டு பிரசாதமாக கொடுக்கப்படும் புட்டுமாவு உருண்டையை பலரும் ஆரவத்துடன் வாங்கிச் செல்கின்றனர்” எனவு தெரிவித்தனர்.