கோயில் பெயரில் இணையதளம் தொடங்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சைபர் கிரைமின் ADGP மற்றும் மத்திய அரசை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக இணைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.


அதில், "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல முக்கிய கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகிறது. இக்கோயில்களுக்கு வெளிநாட்டில் இருந்து பலர் தற்போது அதிகளவில் வந்து செல்கின்றனர்.


இக்கோயில்களுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி அதற்கான ரசீதுகளை பெற்று செல்கின்றனர்.


வெளி மாவட்டங்கள், வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் பக்தர்கள் கோயில் இணையதளத்தில் உள்ள கணக்குகளில் பணத்தினை செலுத்துகின்றனர்.


தமிழகத்தில் முக்கியமாக உள்ள கோயில்களில் சில தனியார் இணையதள முகவரி வைத்து கோவிலுக்கு பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகளை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இது குறித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.


எனவே, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் மடங்களில் பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும் இணையதளம் வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கார்த்திகேயன் மற்றும் வெங்கடேஷ் ஆஜராகி தமிழகத்தின் பிரபலமான கோயில்கள் பெயரில் இணையதளங்கள் தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.


அரசு தரப்பில், கோயில் பெயரில் தனியார் வைத்திருந்த இணையதள முகவரி முடக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.


* தனியார் இணையதளம் மூலமாக கோயில் பெயர்களில் ஆயிரக்கணக்கில் இல்லாமல் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர்.


* இதனை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* கோயில் கோவிலாக இருக்க வேண்டும் கோயில் வழிபாட்டிற்கான தளம் வியாபார தளம் அல்ல...


* கோயில் சிலருக்கானது அல்ல; மக்களுக்கானது.


எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் சைபர் கிரைமின் தமிழக கூடுதல் காவல்துறை தலைவர், மத்திய அரசு இந்த வழக்கில் எதிர் மனுதாரராக இணைத்தும் இந்த வழக்கை இதே போன்ற மற்றொரு சில வழக்குடன் இணைத்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.