1.சிவகங்கை அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் பாட்டிலை நோயாளியின் உறவினர் கையில் ஏந்தும் நிலை உள்ளது. இதனால் போதிய குளுக்கோஸ் ஸ்டாண்டுகளை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

2. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளை மீன்வளத்துறை மாவட்ட இணை இயக்குநர் ஆய்வு செய்ய உள்ளதை கண்டித்து, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல்  வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக முடிவு செய்து படகுகளை கரையில் நங்கூரமிட்டு நிறுத்தினர்.

 

3.திண்டுக்கல் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நிர்மலா தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,  வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(33), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கிலி கருப்பன்(28), செம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(22), அம்புலிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த முத்துமணி( 23), செம்பட்டி நாயுடு காலனியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி(18) ஆகியோர் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர்.

 

4.ஜாமின் வழக்கில் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என தீர்மானம் நிறைவேற்றியது குறித்து நாகர்கோயில் பார் கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

5.தமிழ்நாட்டில் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தை ஏற்கவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய - மாநில அரசு பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.



6.மதுரையில் கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கைது செய்யபட்டுள்ள  காவல் ஆய்வாளரின் சொத்து மற்றும் அவரது உறவினர்களை சொத்து விவரங்கள் எவ்வளவு என்பது குறித்து விபரங்கள்  பதிவு துறையிடம் பெறபட்டுள்ளதா -  நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர்.

7. மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா  பனையூரை சேர்ந்த சோனை என்பவருக்கு சொந்தமான மூன்று வீடுகளை உறவினர்களுக்கு பிரித்து கொடுக்க பட்டா வாங்க விண்ணப்பம் செய்திருந்தார். இந்த நிலையில், ஒரு வீட்டிற்கு 3000ரூபாய் என மூன்று வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய 9ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பனையூர் கிராம நிர்வாக அலுவலர் சத்தியஜோதி மற்றும் உதவியாளர் காந்தி கேட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சோனை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வி.ஏ.ஓ அலுவலகத்தில் ரசாயனம் தடவப்பட்ட லஞ்ச பணத்தை பெற்ற சத்யஜோதி மற்றும் உதவியாளர் காந்தி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.

 

8. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் தெரிவித்துள்ளார்.

9.திருநெல்வேலி சென்ற அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு, விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி யில் அ.தி.மு.க.,வினர் கோஷ்டியாக பிரிந்து மோதிக்கொண்டனர்.


10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 26 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74445-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 18 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73026 -ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல்.  இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1163 இருக்கிறது. இந்நிலையில் 256 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.