மதுபோதையில் மனைவியை கொலை செய்த நபருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை, 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள மேல உள்ளூர் கிராமத்தில் அய்யாசாமி மற்றும் அவரது மனைவி மலர்விழி வசித்து வந்துள்ளனர். இவர்களின் இரண்டு மகன்களும் திருச்சி மற்றும் சென்னையிக் வேலை பார்த்து வந்த நிலையில்,  2015ஆம் ஆண்டு தீபாவளி  கொண்டாடுவதற்காக இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அய்யாசாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், ஐயாசாமிக்கும் மலர்வழிக்கும் ஏற்பட்ட சண்டையில், ஆத்திரமடைந்த அய்யாசாமி, மலர்விழியை அருகில் இருந்த இரும்பு கம்பியால் தாக்கியதால் மலர்விழி உயிரிழந்தார்.


இதனைத் தொடர்ந்து ஒரத்தநாடு  காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் மகிளா நீதிமன்றம் 2017ல் அய்யாசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அய்யாசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, "மனுதாரர் தொடர்ச்சியாக குடிப்பழக்கம் உடையவர். மேலும் நேரில் கண்ட அவரது மகன்களின் சாட்சிகளின் அடிப்படையில், மனுதாரர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது.  ஆனால் மனுதாரர் இந்த சம்பவத்தின் போது, எவ்விதமான ஆயுதத்தையும் வைத்திருக்கவில்லை இதனால், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இச்சம்பவத்தை அய்யாச்சாமி செய்யவில்லை என்பது தெரிய வருகின்றது. ஆகவே, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் தண்டனை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.


 




மற்றொரு வழக்கு


தமிழகத்தின் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப, சட்டக்கல்வி இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரைத்துள்ளது.


தேனியைச் சேர்ந்த சசிகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், "தன்னை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து  தேனி அரசு கல்லூரி முதல்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  "75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையிலும்,  சுதந்திர போராட்ட தலைவர்கள், சமூகத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக இடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கல்லூரி முதல்வர் அறையில் அம்பேத்கர் உருவப்படத்தை வைக்கவும், பாடங்களை தமிழில் பயிற்றுவிக்கவும் கோரியுள்ளார். இந்த கோரிக்கைகளை முன்வைத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொண்டுள்ளார்.  கல்லூரி முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். மனுதாரர் ஏற்கனவே இரண்டு வாரங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இந்த தண்டனை போதுமானது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் அறையிலும் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டுவிட்டது.  அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பாளர். சமூக நீதியின் அடையாளம். அவரது பங்கு ஈடு செய்ய இயலாது. ஒவ்வொரு சட்டக்கல்லூரி மாணவருக்கும் அவர் மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார். சென்னை சட்டக் கல்வியின் இயக்குனர் தமிழகத்தின் அனைத்து அரசு கல்லூரிகளிலும் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கின்றது.  மதுரைக்கிளை வழக்கறிஞர் நல வாரியத்தின் சார்பில் 10 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மனுதாரர் சட்ட புத்தகங்களை வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளத அம்பேத்கரின் பொன்மொழியில்  மனுதாரர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவற்றில் முதலாவதான "கற்பி"என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நீதிமன்ற அறையில் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம் இல்லை. விரைவில் இது நிவர்த்தி செய்யப்படும் எனக்குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.