நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி வீசி, தரக்குறைவாக பேசியது தொடர்பான  வழக்கில், முன் ஜாமின் கோரி மூவர் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பை ஒத்தவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  உத்தரவிட்டுள்ளது.

 

மதுரையை சேர்ந்த மணிகண்டன், கோகுல் அஜித், வேங்கைமாறன் ஆகியோர் தனித்தனியே முன் ஜாமின் கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "2022 ஆகஸ்ட் 13ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மதுரை புதுப்பட்டி சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தது.

 

ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் மதுரை விமான நிலையம் வந்திருந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும்,  ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அவரை வரவேற்கவும், ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் அங்கு சென்றிருந்தோம்.

 

அப்பொழுது தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் வாகனம் வந்த பொழுது, கூட்டத்திலிருந்து செருப்பு வீசப்பட்டது. இது தொடர்பாக பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் 2022 ஆகஸ்ட் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டு அன்றே ஜாமினில் வெளிவந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 2022 ஆகஸ்ட் 14ஆம் தேதி மாணிக்கம், நடராஜன் மற்றும் சுதாநாகுலு ஆகியோர் கைது செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அங்கு அவர்களிடம் பிணையம் பெறப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இந்நிலையில், எங்களையும் இந்த வழக்கில் கைது செய்யவிருப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றது. இந்த செயலில் நாங்கள் ஈடுபடவில்லை. எங்கும் தலைமறைவும் ஆகவில்லை. இந்த வழக்கிற்கு தேவையான பிணையம் வழங்கவும் தயாராக உள்ளோம். ஆகவே, எங்களுக்கு  முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

 

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பாக  விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், " போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. ஆனால், மனுதாரர்களின் உரிமை விளம்பர நோக்கிலானதாக உள்ளது. முன் ஜாமின் கோரிய மூவர் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனுதாரர்கள் தேசியக் கொடி பொருத்தப்பட்ட வாகனத்தையும், அரசு பிரதிநிதியையும் அவமானப்படுத்தி உள்ளனர். இதனால் அன்று சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்திய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த நபரின் உடலுக்கு மரியாதை செலுத்தும், நிகழ்வில் நடத்த இந்த சம்பவத்தை அரசு சட்ட விரோதமானதாக, ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதலாகவே உள்ளது. ஆகவே மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, முன் ஜாமின் வழங்கக் கூடாது" என வாதிடப்பட்டது. மனுதாரர் தரப்பில், இது திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல. எதிர்பாராதவிதமாகவே நடந்தது" என தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை தீர்ப்பிற்காக ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 



மற்றொரு வழக்கு


அதிகாரத்தைக் கொண்டு யாரையும் மிரட்டக்கூடாது? சட்டபூர்வமான செயல்பட வேண்டும் - நீதிபதி


விருதுநகர் மாவட்டம் பி.வாகைகுளம் பகுதியில் குவாரி நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கூடிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உறங்காப்புலி, ராஜாங்கம் ஆகியோர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், "பால்சாமி என்பவர் விருதுநகர் மாவட்டம், பி.வாகைக்குளம் கிராமத்தில் கிருதுமால் ஆற்றின் கரையிலுள்ள பட்டா நிலத்தில் குவாரி நடத்துவதற்காக உரிமம் பெற்றுள்ளார். 


குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்கும் பொழுது அந்த இடத்திற்கு அருகில் சாலைகள், ரயில் பாதைகள் உள்ளதா, வீடுகள் உள்ளனவா, நீர்நிலைகள் உள்ளனவா, போன்றவற்றை ஆய்வு செய்தே அனுமதி வழங்க வேண்டும். ஆனால், அதுபோன்ற ஆய்வு எதுவும் மேற்கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்குவாரி அனுமதி வழங்கிய இடத்தின் அருகே கிருதுமால் நதி உள்ளது. குவாரி நடத்துவதற்கான உரிமத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.


இது ஏற்கத்தக்கதல்ல இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கல்குவாரி நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்." என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அரசு தரப்பில், மனுதாரர் வழங்கிய புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் குவாரிக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு ஜே.சி.பி இயந்திரம் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் குவாரி உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் மேலும் குவாரியிலிருந்து மண் எடுத்துச் செல்ல வழங்கப்படும் போக்குவரத்து உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து நீதிபதிகள், அதிகாரத்தைக் கொண்டு யாரையும் மிரட்டக்கூடாது? சட்டபூர்வமாக செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் குவாரி உரிமம் குறித்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண