தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு , குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது, இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.



மேலும் கும்பக்கரை அருவியில் குளித்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல்வேறு மூலிகைச் செடிகள் நடுவில் கடந்து வரும் நீரில் குளிப்பதால் பல்வேறு நோய்களில் மீண்டு வர உதவுவதாக கூறுகின்றனர். மேலும்  கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய நீரானது கடும் குளிர்ந்த் நிலையில்  இருப்பதால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த அருவியில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இயற்கை சூழலில் பசுமை நிறைந்த அடர்ந்த வனப் பகுதிகளுக்கு  நடுவில் இந்த அருவி அமைந்துள்ளதால் கும்பக்கரை வனப்பகுதியில் விலங்கினங்கள் காட்டுமாடு சிறுத்தை அரிய வகை குரங்கினங்கள், மான், புள்ளி மான், மிளா மான் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்களும் உள்ளன.



பல்வேறு  வகையான மயில் உள்ளிட்ட பறவைகளும்  பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகளும் இந்த மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றது. அருவிக்கு வருகின்ற வழியில் சுற்றுலா பயணிகள் வன விலங்குகள் மற்றும் பறவைகளை காண்பதற்கு எளிதாகவும் கண்டு ரசிப்பதற்கு ஏதுவாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் .  இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வண்ணம் கும்பக்கரை அருவி பகுதியை  சுற்றிலும் தேவதானப்பட்டி வனத்துறையினரால் கம்பி வேலி அமைத்து வனவிலங்கு அச்சம் இன்றி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாகவும் அமைந்துள்ளது.




வனத்துறையினர் அருவியில்  குளிக்கின்ற பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் வனப்பகுதிக்குள் இருக்கும் இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுருளி அருவிக்கு அடுத்தபடியாக கும்பக்கரை அருவி உள்ளதால்  இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிரித்துள்ளது. தற்போது கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு சுற்றுலாத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. கொரோனா நோய் தொற்று பாதிப்புஎண்ணிக்கை நாளுக்கு நாள் குறையும் நிலையில் அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படும் கும்பக்கரை அருவி சுற்றுலா பயணிகள் வருகைக்காக காத்திருப்பது போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. 


 


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!