கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் அருங்காட்சியக வாசலில் அனைவரும் இணைந்து குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.

 

வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் 


 

தழிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் பற்றி வெளிநாட்டினர் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சிறப்பு சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மன், கொரியா, ஜப்பான் , டென்மார்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 22 ஆண், பெண் சுற்றுலா பயணிகள் தென்மாவட்டங்களில் உள்ள பாரம்பரியம் மிக்க கோயில்கள், சுற்றுலா தளங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட வெளிநாட்டு பயணிகளில் வியந்து பாராட்டியுள்ளனர்.


 

கீழடியின் சிறப்பு


 

தமிழ்நாடு 15 இலட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. தற்போது கீழடியில் 10-ம் கட்ட அகழ்வாய்வு பணியினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.  

 


 

கீழடி அருங்காட்சியகம்


 

keezhadi Museum ; இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை காண பல்வேறு நாடுளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய தமிழர்களின் கல்வி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, தொழில் உள்ளிட்டவைகள் பற்றிய அகழாய்வு கீழடியில் நடந்து வருகிறது. இதில் உறைகிணறு, செங்கல் கட்டுமானம், தங்க காதணி, சங்கு வளையல்கள், விலங்குகளின் எலும்புகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன. இவற்றை கொண்டு கீழடியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தனித்தனி கட்டிட தொகுதிகளில் 13 ஆயிரத்து 834 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  கீழடியில் கடந்தாண்டு திறக்கப்பட்ட உலக தரம் வாய்ந்த அருங்காட்சிகத்தை காண சிறப்பு பேருந்தில் சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்து கீழடி அகழாய்வு தள இயக்குநர் ரமேஷ், இணை இயக்குநர் அஜய் உள்ளிட்டோர் விளக்கமளித்தனர். அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் அருங்காட்சியக வாசலில் அனைவரும் இணைந்து குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். பின் சுற்றுலா பயணிகள் நெல்லை, துத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு கிளம்பி சென்றனர். கீழடியை வியந்து பார்த்த அவர்கள் தங்களை வியக்க வைப்பதாக பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.