'கீழடி' - என்ற ஒற்றைச் சொல் தமிழர்கள் கொண்டாடும் சொல்லாக இருந்துவருகிறது. 2600 ஆண்டுகள் முந்தைய தமிழர்களின் பெருமையை சான்றுகளுடன் எடுத்துக்காட்டுகிறது. இந்நிலையில் கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணி துவங்கியது.

 

கீழடி அகழாய்வுப் பணி


 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிக்கு உட்பட்ட கீழடி, மதுரைக்கு அருகே உள்ளது. கீழடியில் கடந்த  2014 -ம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7, 8, 9 உள்ளிட்ட  அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். கீழடி அகழாய்வில் இதுவரை 9 கட்ட அகழாய்வு பணிகளும் அதை சுற்றியுள்ள அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் 4 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த வருடம் கீழடியில் நடந்த 9-ம் கட்ட அகழாய்வில் 14 குழிகள் தோண்டப்பட்ட  800 மேற்பட்ட  பொருட்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் படிக எடைக்கல், பாம்பின் உருவம், தங்க வளையம், காப்பர்  ஊசி உட்பட சிறப்பு வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

 

10-ம் கட்ட அகழாய்வுப் பணியை துவக்கிய முதல்வர்


 

வழக்கமாக அகழாய்வு பணி  ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். இந்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால் மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பத்தாம் கட்ட அகழாய்வு பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின்  கீழடி கொந்தகை, மற்றும்  வெம்ப கோட்டை, திருமலாபுரம், ஊத்து கோட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள  8 இடங்களில்  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். குறிப்பாக, கீழடியில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ஜவகர், பிரபாகரன், கார்த்திக் என்ற மூவருக்கு சொந்தமான இடத்தில்  அகழாய்வு பணி இந்த வருடம்  நடைபெற இருப்பது என்பது, குறிப்பிடத்தக்கது.

 


 

அரிய வகை பொருட்களை கண்டுபிடிக்க வாய்ப்பு


 

இந்த நிகழ்வில்  தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்  மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித்,  கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணி மற்றும் தொல்லியல் துறை அலுவலர்களான ரமேஷ், அஜய்‌ மற்றும் அகழாய்விற்கு இடம் கொடுத்த விவசாயிகள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர். கடந்த வருடம் போல் இந்த வருடமும் அகழாய்வு  பணியில் அரிய வகை பொருட்களை கண்டுபிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.