கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம் மற்றும் மருங்கூர் ஆகிய 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

கீழடியில் அகழாய்வுப் பணி

 

keezhadi excavation ; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.06.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான கொந்தகை, விருதுநகர் மாவட்டம்- வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டம் - மருங்கூர் ஆகிய 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.

 

வரலாற்றில் புதிய வெளிச்சம்

 

தமிழ்நாடு 15 இலட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.

 

சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பேட்டி

 

இந்நிலையில் கீழடியில் 10-ம் கட்ட அகழ்வாய்வு பணியினை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். கீழடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இருட்டடிப்பு செய்த மத்திய அரசு

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம்...,” கீழடி அகழ்வாய்வு பணியினை மத்திய அரசு மேற்கொள்ளும் போது அதனை இருட்டடிப்பு செய்தனர். தமிழக அரசு கீழடி அகழ்வாய்வு பணியினை மேற்கொள்வதே சிறந்தது. கீழடி அகழாய்வு பணியினை தமிழக அரசு மேற்கொள்வதால் உலக அங்கீகாரம் கிடைக்காது, என்பது தவறு. இதன் அறிக்கைகளை 26 மொழிகளில் வெளியிடுகின்றனர். தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து கீழடி அகழ்வாய்வு பணிகள் தாமதமாக துவங்கியுள்ளது”.

 

தி.மு.கவின் பி -டீமாக அ.தி.மு.க., செயல்படுவதாக டி.டி.வி தினகரனின் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு

மைதானத்தில் விளையாட வந்துவிட்டு விளையாடாவிட்டால் இது போன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.