"அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நாட்டின மாட்டிற்கு மட்டும்தான் அனுமதி.  நாட்டின மாட்டிற்கு மட்டும்தான் டோக்கன் கொடுக்கப்படும்" என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நெருங்கிவரும் சூழலில் தென் மாவட்டங்களின் முக்கிய நாட்டு மாட்டினமான புலிக்குளம் காளை குறித்து தெரிந்துகொள்ள சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள புலிக்குளம் மாட்டின ஆரய்ச்சி நிலையத்திற்கு சென்றோம்.



 

மான்குட்டி போல துள்ளிக் கொண்டிருந்த கன்றுகள் அன்பை வெளிப்படுத்தியது. மான் கொம்பை போல் நீண்ட கொம்புகளுடைய பசுக்கள் ஆராய்ச்சி நிலையத்திற்குள் சூப்பர்வைசர் போல் சுற்றித் திருந்தது. கோபம் கொண்ட காளைகள் மட்டும் கரும்பு தோட்டத்திற்கு பின்னால், உள்ள கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. புலிக்குளம் ஆராய்ச்சி நிலையத்தை சரணாலயம் போல்  தெரிந்தது. அந்த அளவிற்கு சோலையாக இருந்தது. புலிக்குளம் காளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு உகந்ததாக போற்றப்படும் தமிழ்நாடு இனமான இந்த வகை மாடுகள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள புலிக்குளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டது. அதனாலேயே இதனை புலிக்குளம் காளை என அழைக்கப்படுகிறது. புலிகளையே குத்திக்கொள்ளும் அளவிற்கு திறன் கொண்டிருந்ததால் இந்த மாடுகளால் தான் கிராமத்திற்கே பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.



கூர்மையான கொம்பையும், லேசான குட்டையும் வலிமையான உடலை கொண்ட இந்த காளை திடமான திமில் கொண்டுள்ளது. சாம்பல் நிறம் மற்றும் கருஞ்சாம்பல் நிறங்களிலேயே அதிகளவு தோற்றம் உள்ளது. எல்லா பருவ நிலையையும் தாங்கும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இவை சிவகங்கை,  விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல மாவட்டங்களில்  அதிகளவு வளர்க்கப்படுகிறது. பன்மடங்கு அழிந்த இந்த இனம் தற்போது விழிப்புணர்வால் மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளது. கோவக்கார காளையாக பார்க்கபடும் புலிக்குளம் காளை பாசத்தையும் அள்ளி தெளிக்குமாம்.

 



 

சுறுசுறுப்புக்கு பெயர் பெற்று தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. உயரம் குறைவு என்பதால் வண்டி மாடாக பணி செய்ய பிடிக்காத இந்த காளை கிடமாடகவும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பாளர்கள் புலிகுளத்துக் கொம்புவச்ச சிங்கத்தை நல்ல விளை கொடுத்து வாங்குகின்றனர். ஜல்லிக்கட்டில் பெயர் எடுத்துக்குடுத்த காளைகள் லட்ச கணக்கில்  விலை போகும் என்பதில் ஆச்சரியம் இல்லை. புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு நாட்டு வகை மரக்கன்றுகளை நட்டு பரமாரிக்கின்றனர். மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனம், அடர்தீவனங்கள் உள்ளேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மாடுகளால் கிடைக்கும் சாணத்தின் மூலம் மண்புழு உரங்கள் தயாரித்து மானிய விலையில் கொடுக்கப்படுகிறது. புலிக்குளம் மாட்டின பசுவின் பாலும் விற்பனை செய்யப்படுகிறது. 



ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் சீனிவாசனிடம் பேசினோம்," பொதுவாக புலிக்குளம் மாட்டினம் கிடைமாட்டிற்கும், ஜல்லிக்கட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. கிடமாடுகள் மூலம் இயற்கை விவசாயம் முன்னெடுக்கப்படுகிறது. கூட்டம், கூட்டமாக வயல்வெளிகளில் கிடமாடு போடும் பழக்கம் தொடர்ந்து வருகிறது. அதே போல் காளைகளை அதிகளவு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பயன்படுத்துகின்றனர். நாட்டுமாடுகளில் புலிக்குளம் காளையும் அதிகளவு விரும்பப்படுகிறது. புலிக்குளம் ஆராய்ச்சி  நிலையம் 44 ஏக்கர் பரப்பளவில் 2017-ல் துவங்கப்பட்டது. தற்போது சோலை வனமாக மாறியுள்ளது. 3 காளைகள், 45 பசுக்கள், 27 கன்றுகள் என தற்போதைய நிலையில் உள்ளது. இந்த மாட்டினத்தின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து சிறப்பான பணி செய்துவருகிறோம். இந்த ஆராய்ச்சி நிலையம் மூலம் விவசாயிகளும், மாணவர்களும் வெகுவாக பயன்பெறுகின்றனர்" என தெரிவித்தார்.



 

புலிக்குளம் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் மாட்டின் உரிமையாளர் சோனை, " புலிக்குளம் காளைகளுக்கு மெனக்கிட்டு உணவு வைக்கனும்னு அவசியம் இல்ல. வீட்டு கழனி தண்ணி குடிச்சும், பச்ச புல்லையும் மேஞ்சு உடம்ப தேத்திக்கிறும். அதே அளவு கோவமும் இருக்கும். ஜல்லியட்டு முடிஞ்சு மறுவடியும் வீட்டுக்கு வந்தாதே குணமே மாறும்.  அதுவரைக்கும் சண்டியர்தே. ஆனா வீட்டு ஆளுக கிட்ட குணத்துக்காரனா இருக்கும். புலிக்குளம் காளைய பொறுத்தவர தீவன செலவு குறைவு. அதனால இராமநாதபுரம், சிவகங்கை ஒட்டுன ஏரியாக்கள்ள நிறைய வளத்தாங்க. நல்ல கன்றுகள கூடுமான விளைக்கு விற்பனையாகுறதால கணிசமான லாவம் கிடைக்கும். முன்னாடியெல்லாம் ஜல்லியட்டு, மஞ்சரெட்டு 90% புலிக்குளம் காளையதே விரும்புவாக. அதெல்லாம் இடைபட்ட காலத்துல குறைஞ்சுருச்சு. ஜல்லியட்டு போராட்ட எழுச்சிக்கு பின்னாடி மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கு.

 



 

புலிக்குளம் கருப்பு வெள்ளை கலந்து பாக்க முடியும். பியூர் வெள்ள ரெம்ப அறிது. வாழ் முழங்காலுக்கு மேல இருக்கும்.  நாடி ஒட்டி இருக்கும். புலிக்குளம் காளையில மச்சம் இருக்க மாடுக ரெம்ப ஆக்ரோசமாக இருக்கும். உதையிர திறனும் அதிகமா இருக்கும். பெரிய அளவு பயிற்சி இல்லாடிட்டியும் நல்லா விளையாடும். காங்கேயம் அளவுக்கு உயரம் இல்லாட்டியும் விளையாட்டில் வித்தக்காரனா இருப்பான்" என்கின்றனர் மாட்டு உரிமையாளர்கள்.