ராமநாதபுரம் மாவட்டம் அதிகம் கடல்பகுதி சார்ந்த இடமாக இருந்தாலும் மழையை நம்பி மானாவாரியாக நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட வேளாண் பணிகள் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தை மேம்படுத்தவும், விளைச்சலை அதிகரிக்க வேளாண்துறை மூலம் விதைப்பு முதல் அறுவடை, விற்பனை பல்வேறு அரசு உதவிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் 1,33,823 ஹெக்டேர் பரப்பளவில் நெல், 4036 ஹெக்டேரில் எண்ணெய் வித்துகள், பருத்தி 6703 ஹெக்டேர், தென்னை 8419 ஹெக்டேர் இது போக சிறுதானியங்கள் 9731 ஹெக்டேர், பயறுவகை 4702 ஹெக்டேர் சாகுபடி நடைபெறுகிறது.




இவ்வாண்டு வேளாண் பட்ஜெட்டில் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 7 ஊராட்சிகள் தேர்வு செய்து அங்கு விவசாயிகளை கணக்கெடுத்து சிறப்பு கவனம் செலுத்தி வேளாண் பணியில் தன்னிறைவு பெற உதவி செய்கிறோம். மத்திய, மாநில திட்டங்களை செயல்படுத்த இரண்டு துணை இயக்குனர்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர், உழவர்பயிற்சி நிறுவனம், நுண்ணீர் பாசன திட்ட துணை இயக்குனர், 10 உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.




முதல்வரின் நீடித்த மானாவாரி வேளாண் இயக்கம் சார்பில் அங்கக உரம், செயல்விளக்கம், பிரதம மந்திரி சொட்டுநீர் நுண்ணீர் பாசனம் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 75 சதவீதம் வழங்கப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரிசி, பயறு, எண்ணெய் வித்து, விதைகள், நெல் நுண்ணுடோட்டம், பயிர் பாதுகாப்பு, பம்ப் செட் அமைக்க, தார்பாய்க்கு கூட மானியம் வழங்கப்படுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இயந்திரம் மூலம் நடவு செய்தல், விதைப்பண்ணை உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுபோக நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு துணை நீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் தரைநிலை தொட்டி, ஆழ்குழாய் கிணறு, பம்ப்செட் ஆகியவற்றிற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.




செயற்பொறியாளர் கட்டுப்பாட்டில் பொறியியல் துறை செயல்படுகிறது. விவசாயப்பணிகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப கருவிகளைமானிய விலையில் வழங்குவது. அவற்றை எவ்வாறு கையாள்வது போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். மாவட்டத்தில் டிராக்டர், சோலார் பம்ப்செட், சூழற்கலப்பை உள்ளிட்டவைகள்வாங்கவும், இதுதொடர்பாக தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற பொறியியல் துறையை விவசாயிகள் அனுகலாம்.



ஒவ்வொரு ஆண்டும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தரிசுநிலத்தை விளைநிலமாக மாற்ற ஹெக்டேருக்கு 13,500 மானியம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு கருவேல மரங்கள் வளர்ந்த பகுதியில் 325 எக்டேரில் பயிர்சாகுபடி நிலமாக மாற்றப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 950 எக்டேர் வரை தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதனால், இந்தாண்டு  மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை விட  மானாவாரியாக நெல்சாகுபடி அதிக அளவில்  மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2 ஆண்டாக மழைப்பொழிவு நன்றாகஉள்ளதால் சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 




இதன்படி 2018-19 1,25,616 ஹெக்டேர், 2019-20 இல் 1,27402, 2020-21ல் 1,33,823 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. மேலும் ஜனவரி மழையால் கண்மாய்களில் தண்ணீர் இருந்ததால் இரண்டாம் போகமாக 2766 ஏக்கரில் நெல், பருத்தி சாகுபடி செய்தனர். 2021-22இல் நெல், சிறுதானியம், எண்ணெய் வித்துகள் 4,22,130 டன் உணவு தானிய உற்பத்தியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த பரமக்குடி, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் மையம் மூலம் அதிக மகசூல் தரும் பாரம்பரிய நெல் விதைகள், நவீன தொழில்நுட்ப ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் மண் பரிசோதனை செய்து அதற்கு ஏற்றவாறு களைக்கொல்லி, அடி உரம் இட வேண்டும். யூரியாவை அதிகளவில் பயன்படுத்தக்கூடாது. நெல்சாகுபடியில் விதைப்பு இயந்திரங்களை பயன்படுத்தினால் செலவு குறையும், அதிக மகசூல் பெறலாம். மேலும், பயிர்காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. 2016-17 முதல் நான்கு ஆண்டுகளில் 1428.14 கோடி அளவிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுஉள்ளது. இதுபோக பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆண்டுக்கு 6 ஆயிரம் வீதம் 1,22,149 விவசாயிகளுக்கு கவுரவ நிதியாக 168 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோக மழையால் பாதிக்கப்பட்ட 1,30,000 விவசாயிகளுக்கு 158 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு காப்பீட்டு தொகை, நிவாரணத்தொகை வழங்கியுள்ளோம். விடுப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உற்பத்தியை பெருக்குவது என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறோம் என தெரிவித்துள்ளனர்.