பல்லாங்குழி

 

இன்றைய காலகட்டத்தில்  குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் பொழுதுபோக்கிற்காக செல்போன்களை பயன்படுத்திக் கொண்டே இருப்பதால் மன அழுத்தத்திற்கு ஆளாகிவருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கான மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பழமை வாய்ந்த பல்லாங்குழியை அனைவருக்கும் அறிந்து விளையாட வைக்கும் நோக்கில் உலக அருங்காட்சியங்கள் தினத்தினை முன்னிட்டு மதுரை அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் காந்தி அருங்காட்சிய வளாகத்தில் அமைந்துள்ள திண்ணைகளில் பல்லாங்குழி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் முதியவர்கள் கல்லூரி மாணவிகள் என 30க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்களுக்கு வயதின் அடிப்படையில் பல்லாங்குழி விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.

 

பாரம்பரிய விளையாட்டு போட்டியான பல்லாங்குழி விளையாட்டு போட்டியில் வயது வித்தியாசம் இன்றி மூதாட்டிகள் உடன் சிறுமிகளும் அதே போன்று சிறுவர் சிறுமியர் என தனித்தனி பிரிவில் நடத்தப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் மிகுந்த ஆர்வத்தோடு நுணுக்கமாக பல்லாங்குழி விளையாட்டை விளையாடினர்.

 

பல்லாங்குழியில் கணித அறிவியல்

 

இதனையடுத்து மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டு இறுதியாக தேர்வு செய்யப்பட்ட முதல் மூன்று நபர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக பங்கேற்ற மற்றும் சிறப்பாக விளையாடிய மூதாட்டிகளுக்கும், இளம் பெண்கள், சிறுவர் சிறுமியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்லாங்குழி போட்டியின் நன்மைகள் குறித்தும் பல்லாங்குழி விளையாட்டு போட்டியின் மூலமாக கணித அறிவியல் மேம்படுவது உடல் ரீதியான கை மற்றும் கால்களுக்கான புத்துணர்வு பயிற்சி அளிப்பது குறித்தான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து பல்லாங்குழியில் உள்ள நுணுக்கங்கள் குறித்தும் போட்டியில் எவ்வாறு விளையாடுவது என்பது குறித்தும் மூதாட்டிகளிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டு அதில் அவர்களுடைய ஆலோசனை பெறப்பட்டது.

 

பரிசுகள்

 

பல்லாங்குழி விளையாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டி கலைஞர் நூற்றாண்டு நூலக பொறுப்பாளர் தினேஷ் மற்றும் பேராசிரியர் அழகுசெல்வம் கலந்து கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

 

பல்லாங்குழி போட்டியினை தொடர்ந்து வரும் 16 ஆம் தேதிவரை தட்டாங்கல், தாயம், நொண்டி, கிட்டிபுல், கோலிக்குண்டு ஆகிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அரசு அருங்காட்சியக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் வரை தினசரி நடைபெற உள்ளதாக அருங்காட்சியக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது போன்று கோடை காலங்களில் இளம் தலைமுறையினருக்கு பயனுள்ள பல்லாங்குழி விளையாட்டு போட்டியினை நடத்தியது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது எனவும் அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய பங்கேற்பாளர்கள் தற்போதைய காலகட்டத்தில் செல்போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்று பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி விளையாட்டு போட்டியில் ஆண்கள் பெண்கள் வித்தியாசமின்றி அனைவரும் கலந்து கொண்டு உற்சாகமாக பங்கேற்றோம் எனவும்,  இதில் சிறப்பாக விளையாடியதற்கு பரிசு பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.