தருமபுரி ஆதீனத்திற்கான பட்டண பிரவேச நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்லக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு இந்து அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன.  மேலும், பட்டண பிரவேச நிகழ்வை சுமூகமாக நடத்தவும் கோரிக்கை விடுத்தன. கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு குன்றக்குடி ஆதீனம், மயிலம் ஆதீனம், கோவை பேரூர் ஆதீனம் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர்.




இந்த பேச்சுவார்த்தையின்போது தருமபுரி ஆதீனம் பட்டின பிரவேச நிகழ்வில் அரசியல் தலையீடு தேவையில்லை என்றும், பட்டண பிரவேச நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு ஆவண செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்தார் என்றும் கூறியுள்ளார். மேலும், அமைச்சர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர் அவ்வாறு பேசியதை தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மடத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். 





முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டி, ”ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும் என்றும், எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன். பட்டின பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும். அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லி விட்டார், இனிமேல் சொல்ல மாட்டார். ஆதீன மடத்தில் பா.ஜ.க, இந்து அமைப்புகள் தலையீடு இருப்பதை பற்றி யார் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் அதை கண்டுகொள்ள போவதில்லை. முந்தைய ஆதீனம் அ.தி.மு.க, தி.மு.க., ஆட்சிகளின் போது அவைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் அப்படி எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது. ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மிரட்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.  ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளே முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார். அது குறித்து அரசுக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.



ஏழை, எளியோர் உள்ளிட்ட  அனைத்து மக்களும் முழுமையாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணம் வாங்கும் நடைமுறையை அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்”.  சன்யாசி தர்மங்களை ஆதீனங்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என எம்.பி. சு.வெங்கடேசன் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, சந்நியாச தர்மங்களை நான் முழுமையாக பின்பற்றுகிறேன் என்றார். பிரதமர் மோடியை சந்தித்து பாதுகாப்பு கேட்கும் முடிவு குறித்த கேள்விக்கு,

மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும் என்றார்.